By Village Missionary Movement
Monday, 15-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 15-11-2021
அலங்கோலத்திலிருந்து அலங்காரம்
“...பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.” – ஏசாயா 61:4
ஸ்காட்லாந்து தேசத்தில் பண்டைய கால கட்டிடக்கலையில் சிறந்த மாளிகை ஒன்றில் விசேஷித்த அறை ஒன்று உண்டு. அந்த மாளிகையை பார்வையிட செல்லும் ஓவியரெல்லாம் அந்த அறை சுவர்களில் ஏதாகிலும் ஒரு ஓவியத்தை வரைந்து செல்வதுண்டு. அப்படி அந்த அறையின் விசேஷம் என்னவென்றால். ஒரு காலத்தில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு அழகிய வர்ணம் பூசப்பட்டதாய் இருந்தது. அது ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு சோடா குடிநீர் சேமிப்புகலம் வெடித்து அதன் அழகிய சுவரெல்லாம் கறைபட்டு போயின. அங்கு தங்கியிருந்த பிரபல ஓவியர் சர். எட்வின் லாண்ட்சீர் என்பவர் அந்த கறைகளை பார்த்தபோது அவை நிலைத்திருக்கும் கறைகள் போல் அவருக்கு தோன்றினதினால் தன் கலைத்திறனால் அந்த கறைகளை விலைமதிக்க முடியாத ஓர் ஓவியமாக மாற்றிவிட்டார். அதில் அவர் ஒரு நீர்வீழ்ச்சியின் பின்னணி காட்சியை வரைந்தார். அதிலுள்ள பாறைகளும், மரங்களும் அவற்றிற்கிடையில் கெம்பீர தோற்றத்துடன் நிற்கும் ஒரு அழகிய ஆண் மான் காண்போருக்கு உண்மை காட்சியை போல தோற்றமளித்தது. இந்த ஓவியம் ஸ்காட்லாந்தின் சிறந்த மலைக்காட்சி ஓவியங்களில் ஒன்றாக விளங்கியது. அன்று அலங்கோலமான கறை இன்று ஆயிரக்கணக்கானோரை தன் பக்கம் இழுக்கும் ஒரு அழகிய காட்சியாய் விளங்குகிறது.
ஒரு காலத்தில் நமது ஆவிக்குரிய வாழ்வும் நன்கு வளர்ச்சியடைந்து தேவனுடைய கண்களுக்கு அழகானதாக காணப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போதோ நம் நல்ல சுபாவங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், மிகச்சிறந்த ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் மறைந்து பாவக் கறை படிந்து அலங்கோலமாய் காணப்படலாம். முந்தின நாட்களில் என்னில் காணப்பட்ட உன்னத அனுபவங்கள் மீண்டும் துளிர்ப்பது சாத்தியம்தானா? நான் இழந்து போயிருக்கும் ஜெப ஜீவியம் என்னில் மீண்டும் புதுப்பிக்கப்படுமா? என்ற அங்கலாய்ப்போடும் சோர்ந்துபோன நிலையிலும் காணப்படுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள். ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் நம் தேவன். ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியை சீர்படுத்தினவர், அவர் உங்களில் சீர்குலைந்து கிடக்கும் அனைத்து மேன்மையான அனுபவங்களையும் மீண்டும் உருவாக்க வல்லமையுள்ளவர். அவரே உங்களது முந்தின சீரைப் பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாக செய்வார். அவர் அலங்கோலத்தை அலங்காரமாகவும், தோல்வியை ஜெயமாகவும், வறண்ட நிலைமையை தண்ணீர் தடாகமாகவும், நீரூற்றாகவும் மாற்றி மிகுதியாய் செழிக்க செய்கின்றவர்.
பிரியமானவர்களே, நீங்கள் இழந்து போன ஆவிக்குரிய வாழ்வை எண்ணி சோர்ந்து போகாமல், உங்களை புதுப்பித்து உயிர்ப்பிக்கக்கூடிய சர்வ வல்லவரின் கரங்களில் இன்றே ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை மீண்டும் அலங்கரித்து அநேகருக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்றுவார்.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
“கழுதைகள் கையேடு” பிரதி மாதந்தோறும் தடையின்றி வெளிவர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250