By Village Missionary Movement
Sunday, 14-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 14-11-2021 (Kids Special)
ஏக்கமும் ஏற்றமும்
“செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;…” – சங்கீதம் 112:4
இயற்கை எழில் சூழ்ந்த அந்த ஓட்டு வீட்டின் பின்புறமிருந்த பலா மரத்தின் கீழே ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்தான். 12 வயது நிரம்பிய சிறுவன் ஹில்க்கியா. சிவந்த மெல்லிய உடலமைப்பும் மழலை மாறா கலையான முகமும் கொண்டவன். மின்மினிப் பூச்சியாய் மின்னும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தன. ஏன்? அவனுக்குத் திக்குவாய். அவனுடன் பிறந்த 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் நன்றாகத்தானே பேசுகிறார்கள். தனக்கு மட்டும் ஏன் இப்படி எனக் கலங்கினான். அவனது ஊரான பரப்புவிளையில் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி உண்டு. எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 40 பேரில் 12 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஒருவன் ஹில்க்கியா. அவனை இதுவரை ஒதுக்கி வைத்திருந்த ஆசிரியர்கள் அவன் நன்றாகப் படித்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டனர். இயேசுவின் அன்பை கூறி வேதம் வாசிக்க, ஜெபிக்க, சாட்சியாய் வாழ அவனை ஊக்குவித்தார்கள். ஹில்க்கியா கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாக வளர்ந்தான். வீட்டுக் காரியங்களில் தாய்க்கு உதவி செய்வான். விவசாய வேலைகளில் தந்தைக்கு ஒத்தாசையாக இருப்பான்.
ஒன்பதாம் வகுப்பு படிக்க 5 கி.மீ. தூரத்திலுள்ள கருங்கல் சந்தை என்ற ஊருக்குப் போக வேண்டும். பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து வசதியும் கிடையாது. வீட்டின் சூழ்நிலை காரணமாக ஹில்க்கியாவின் அண்ணனை மட்டும் படிக்க வைக்க முடிவெடுத்தனர். படிக்க விரும்பிய ஹில்க்கியா அழுது கொண்டிருந்தான். வீட்டின் பின்புறம் வந்த ஹில்க்கியாவின் தாய், அவனைப் பார்த்து பதறியபடி, கண்ணீரின் காரணத்தைக் கேட்டறிந்தாள். படிக்க விரும்பிய தன் பாலகனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்தாள். தன் சக மாணவர்களோடு நடந்தே பள்ளிக்குச் சென்று படித்தான். ஒரே ஒரு நல்ல சட்டைதான் உண்டு. தினமும் துவைத்து, ஈரச் சட்டையைப் போட்டுக் கொண்டு பள்ளி சென்று படித்தான். காலில் செருப்பு கிடையாது, படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் உண்டு. 1956 ஆம் ஆண்டு அவன் படித்த இரணியில் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற 38 பேரில் எஸ். எஸ். எல். சி. அரசுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே. அதில் ஹில்க்கியா ஒருவன். இதற்கிடையில் தன் திக்குவாயை சுகப்படுத்தும்படி இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடி வந்தான். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டார். சரளமாகப் பேசும் திறனையும், இனிமையாகப் பாடும் திறனையும் கர்த்தர் கொடுத்து ஆசீர்வதித்தார். ஹிந்தியும் படித்து வந்த ஹில்க்கியா, ஹிந்தியில் முதுகலைப் பட்டத்திற்கு மேல், “சாகித்தியா ரத்னா” பட்டம் பெற்றான். ஹிந்தி பண்டிட்டாக அரசுப் பள்ளிகளில் பணி செய்தார். தமிழ் பண்டிட்டாக பணி செய்த சகோ. டெய்ஸியை மணந்தார். கர்த்தர் அவர்களை ஊழியத்திற்கு அழைக்கவே, அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு, உத்திரப்பிரதேசம் சென்று, உன்னதமான ஊழியத்தை செய்து, அநேக ஆத்துமாக்களை ஆண்டவருக்கு சொந்தமாக்கினர். சிறு பையனின் ஜெபமும், விசுவாசமும், உழைப்பும் அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது.
இன்று நம் முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள், அவர் குழந்தைகளை அதிகம் நேசித்ததால் தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும்படி கேட்டுக் கொண்டார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார். நீ அவரிடம் ஜெபிக்கும்போது உன் வாழ்வை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
- Mrs. வனஜா பால்ராஜ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250