By Village Missionary Movement
Saturday, 13-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 13-11-2021
பரிசுத்தமும் பரவசமும்
“என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னை சுத்திகரியும்.” – சங்கீதம் 51:2
இக்கால வாலிபர்களுக்கு எங்கும் எதிலும் போராட்டம் அதிகம். சிகரெட், மது, போதைப்பொருள் என நண்பர்களிடமிருந்து வரும் போராட்டம். செல்போன், இன்டர்நெட், டிவி என வீட்டிற்குள்ளேயே இருக்கும் போராட்டம்! இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில், கர்த்தர் விரும்பும் பரிசுத்தத்துடன் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. இதிலிருந்து மீள வழியுண்டா? என்ற ஏக்கம் கிறிஸ்துவை அறிந்த வாலிபர்களுடைய கண்களில் தெரியத்தான் செய்கின்றது.
ஆண்டவரை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பு, ஒரு சிறிய பாவத்திற்கோ, இச்சைக்கோ துணிந்து இடம் கொடுக்கக்கூடாது. அது நம்மை முற்றிலும் அழித்துப்போட்டுவிடும். ஒரு செத்த ஈ, பரிமளதைலம் முழுவதையும் நாறிகெட்டுப் போகப்பண்ணுமல்லவா? ஆகவேதான் இதில் மிகவும் கவனமாயிருந்தான் யோசேப்பு என்னும் வாலிபன். போத்திபாரின் மனைவி மூலம் தன் நற்பெயருக்கு களங்கமுண்டாக்கும் பெரிய சோதனை வந்தபோது, தனக்கு எதிராக தன் மேலாடை சாட்சி சொன்னாலும் பரவாயில்லை, நான் என் சரீரத்தால் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்று வஸ்திரத்தையும் விட்டுவிட்டு ஓடினான். இந்த ஓட்டம் அவனை முதலில் சிறைச்சாலையில் அடைத்தாலும், முடிவில் எகிப்து தேசத்திற்கே அதிகாரியாக்கிற்று.
ஒருவர் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டு சுவரிலுள்ள ஒரு ஆணி மட்டும் தனக்கு வேண்டுமென்று சொல்லியிருந்தார். முதல்நாள் அந்த ஆணியில் பையை தொங்கவிட்டார். மறுநாள் குடை, அடுத்த நாள் அழுக்கு சட்டை, கடைசியில் நாற்றமெடுக்கும் கருவாட்டை பையில் வைத்து தொங்கவிட்டுப் போனார். அங்கே யாரும் குடியிருக்கமுடியாதபடி நாற்றம்! கடைசியில் குடியிருந்தவர்கள் வீட்டையே காலிசெய்து விட்டனர்.
பிரியமானவர்களே! நம் உள்ளத்தில் ஆண்டவருக்கு இடம் கொடுத்து அவரை ஏற்றுக்கொண்ட பின்பு, சிறு பாவம்தானே, ஒரு இச்சையான பார்வைதானே, ஒரு சிகரெட்தானே, கொஞ்சம் மதுபானம்தானே, ஒருநாள் மட்டும்தானே என எண்ணி இவைகளுக்கு இடம் கொடுப்பீர்களானால், நாளடைவில் உங்கள் உள்ளம் முழுவதையுமே அது கறைப்படுத்தி, ஆண்டவரையே வெளியே தள்ளிவிடும். வாழ்க்கை என்னும் அணைக்கட்டில் சிறிய கீரல் இருந்தாலே, ஒருநாள் அது உடையும் அபாயம் உண்டு. ஆகவே உங்கள் இருதயத்தை சிறு பாவமும் கறைப்படுத்தாதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். பாவத்தில் விழும்போது உடனே ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, அவரின் இரத்தத்தால் உடைப்பை சரிசெய்யுங்கள். கறையற்ற பரிசுத்த வாழ்வு வாழ இயேசு கிறிஸ்து நமக்கு உதவி செய்வார். அவரோடு எந்நேரமும் ஐக்கியத்திலிருக்கும்போது பரிசுத்த வாழ்வு வாழ்வது நமக்கு எளிதாகிவிடும்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
“கழுதைகள் கையேடு” அனுப்ப Postal Permit கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250