By Village Missionary Movement
Saturday, 06-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 06-11-2021
அது வளர! இது குறையும்! !
“...பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” – மத்தேயு 10:31
“ஏய் கலா, நீ எதுக்குத்தான் இப்படி கீழே விழுந்து கிடக்கிற முடியை எடுத்து சேர்த்து வைக்கிறாயோ தெரியல” என்று கூறிக்கொண்டே தன் தோழியின் அருகில் வந்தாள் சந்தியா. இருவரும் சிறுபிராயம் முதல் நல்ல தோழிகள். ஒரே பள்ளி, கல்லூரியில் பயின்றவர்கள். சமீப நாட்களாகவே கலாவிற்கு முடி கொட்டுவது பெரிய பிரச்சனையாக இருந்தது. தலையில் ஆங்காங்கே வழுக்கையும் தெரிந்தது. கலாவின் உடல் எடையும் குறைந்துகொண்டே சென்றது. அவ்வப்பொழுது நோய்வாய்ப்படுவாள். சந்தியாவோ – நீ சரியாக சாப்பிடாததுதான்இதற்கு காரணம் என்று கூறுவாள். ஆனால் கர்ப்பப்பை புற்றுநோயினால் கலா பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவது அவளது குடும்பத்தினர் தவிர தன் உயிர் தோழி சந்தியாவிற்குக் கூடத் தெரியாது. தன்னுடைய இந்த நிலையை எண்ணி தினமும் கண்ணீர் வடித்தாள் கலா. புற்றுநோயின் வேதனையும், அதற்கான சிகிச்சையின் மூலமாக தன் சரீரத்தில் ஏற்படும் மாற்றங்களையும் பார்த்து வாழ்வதற்கு பதிலாக சாவதே மேல் என்று மனம் நொந்து போனாள். வாழ்வதைவிட சாவதே மேல் என்று எண்ணி தற்கொலை செய்வதென முடிவெடுத்தாள். இரவு எல்லாரும் தூங்கியபின் மெதுவாக விடுதியின் மொட்டை மாடிக்கு சென்றாள். அனைவரும் தூங்கும் இரவு நேரம் மிகவும் அமைதியாக இருந்தது. ஆனால் பக்கத்து வீட்டில் மட்டும் பாடல் பாடும் சத்தம் கேட்கவே, மாடியின் ஓரத்திற்கு சென்று கூர்ந்து கவனித்தாள். அவர்கள் ஒரு புஸ்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினார்கள். கலா அதைக் கேட்டவாறு நின்று கொண்டிருந்தாள்.
ஒரு சில நொடிகள் கேட்டு பின் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற கிளம்பும் நேரத்தில் “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள், அநேக அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்ற வார்த்தைகள் அவளை தொட்டது. மடமடவென கீழே ஓடினாள், பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று காரியத்தைக் கேட்டு இயேசுவின் அன்பை அறிந்துகொண்டு நம்பிக்கையை பெற்றுக்கொண்டாள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையைக் குறித்த கவலை அநேகரிடம் காணப்படுகின்றது. அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் – National Cancer Awareness Day இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இதை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது அவர்களின் உறவினராகவோ இருந்தால் கர்த்தரிடத்தில் விசுவாசம் வையுங்கள், சோர்ந்து துவண்டு போய்விடாதீர்கள். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். Dollie Freeman என்கிற ஆவிக்குரிய சகோதரர் தன்னுடைய ஒரு புஸ்தகத்தில் இவ்வாறாக எழுதியுள்ளார், “Tumor Shrinks as our faith grows”. நம்முடைய விசுவாசம் வளர, வளர புற்றுநோய் கட்டிகள் குறையும். ஜெபிப்போம், ஜெயம் பெறுவோம்.
- A. ரோஸ்லின்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் பத்திரிக்கை ஆயத்த வேலையில் ஈடுபடும் நபர்கள் தேவ சித்தத்தின்படி செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250