By Village Missionary Movement
Saturday, 30-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 30-10-2021
உத்தமம்
“உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்...” – நீதி. 10:9
ஒரு நாள் வங்கியில் உள்ள எல்லோர் முகத்திலும் ஒரு பயம் காணப்பட்டது. ஆனால் எப்போதும் போல் வங்கி இயங்கிக்கொண்டிருந்தது. மறுநாள் வங்கிக்கு 4 போலீசார் வந்தனர். இந்த வங்கியில் 10 இலட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதைப் பற்றி விசாரித்தனர். ராஜன் மட்டும் பயமில்லாமல் இருந்தான். கேஷியரான அவரிடம் போலீஸ் துருவி துருவி கேள்வி கேட்டனர். ராஜன் கலங்கினார். அப்போது மேனேஜர் வந்து இவர் செய்திருக்க வாய்ப்பில்லை இவர் உண்மையாய் நேர்மையாய் இருப்பார் என்றார். பின் கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமில்லாத பியூன் பாரத் மேல் கவனம் திரும்பியது. கடைசியில் அவன்தான் போலி கையெழுத்து போட்டு மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. அனைவருக்கும் தெரிந்திருந்த ராஜனின் நேர்மை அவரைக் காப்பாற்றியது.
ராஜாவாகிய யோசபாத் கர்த்தருக்குப் பயந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். தன் ராஜ்யமெங்கும் உள்ள விக்கிரக தோப்புகளை வெட்டி, அந்நிய தேவர்களின் பலிபீடங்களை தகர்த்து மக்கள் கர்த்தரைப் பின்பற்றும்படி செய்தார். யோசபாத் ராஜாவாயிருந்தும் அவன் இருதயம் கர்த்தருடைய வழிகளில் உற்சாகங்கொண்டது. எதைச் செய்தாலும் கர்த்தரிடம் விசாரித்து செய்தார். ஒருமுறை போருக்கு சென்றபோது கர்த்தர் போகவேண்டாம் என சொல்லியும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு துணையாக சென்றார். போரில் இஸ்ரவேலின் ராஜா கொல்லப்பட்டார். இவர் தன் நாட்டிற்கு திரும்பியதும் தேவன் தன் தீர்க்கதரிசி மூலமாய் “நீர் தவறான ராஜாவோடு இணைந்து யுத்தத்திற்கு சென்றதால் கர்த்தரின் கோபம் உம்மேல் வர இருந்தது. ஆனால் நீர் செய்த நன்மையான காரியங்களால் கோபம் உம்மேல் வரவில்லை” என்றார். உடனே தன் தவறை உணர்ந்த ராஜா நியாயாதிபதிகள் கர்த்தரின் கட்டளைப்படி நியாயம் விசாரியுங்கள் என சொல்லி மீண்டும் கர்த்தரின் வழியில் நடந்தார். இதன் மூலம் உத்தமனுக்குக் கர்த்தர் துணையென்பதை தான் கற்றுக்கொண்டதாக சொல்கிறார்.
பிரியமானவர்களே! நீங்களும் உங்கள் குடும்பத்தில், பணியிடத்தில் எவ்வாறு உள்ளீர்கள்? இன்று ஆராயுங்கள். கர்த்தருக்குப் பயந்து உண்மையாய், உத்தமமாய் நடந்தால் ஆபத்தில் அவர் நமக்கு துணை நிற்பார். நீங்கள் பத்திரமாய் இருக்கலாம். ஏதோ ஒரு காரியத்தில் சிறிது தவறினாலும் இது தவறு என கர்த்தர் யோசபாத்திற்கு உணர்த்தியது போல் உணர்த்துவார். அப்போது நீங்கள் உங்களை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் உண்மை உத்தமத்தின் வழியில் வந்து விடுவீர்கள். சோதனை, துன்பம் வந்ததும் பிசாசு, “உத்தமமாய் நடந்து நீ என்ன கண்டாய்? துன்மார்க்கமாய் இருந்து சந்தோஷமாய் இருக்கலாம். இது மாயையான உலகம் துன்மார்க்கத்திற்குத்தான் துணை போகும். உண்மைக்கு காலம் கிடையாது, பிழைக்க முடியாது” என்றெல்லாம் பேசுவான். ஆனால் நீங்கள் அவ்வார்த்தைக்கு செவிகொடாமல் தேவனிடத்தில் ஜெபித்து தைரியமாய் இருங்கள். ராஜனுக்கு மேனேஜர் சாட்சி கூறியதுபோல் உங்களைக் குறித்தும் உலகம் சாட்சி கூறட்டும். கர்த்தர் உங்களுக்கு துணை நிற்கிறார். பயமில்லாமல் தயக்கமில்லாமல் முன் செல்லுங்கள், பத்திரமாய் இருப்பீர்கள்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மருத்துவ சேவை பணியை கெத்செமனே வளாகத்தில் துவங்கியுள்ளோம். இதன் மூலம் ஆத்துமாவிலும், சரீரத்திலும் அநேகர் சுகம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250