By Village Missionary Movement
Friday, 29-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 29-10-2021
தீர்மானம் – வெகுமானம்
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்” – நீதிமொழிகள் 28:20
ஹென்றி பி. கிரோவெல் (Henry P.Crowell) என்பவர் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவரது சிறுவயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டு பள்ளிப்படிப்பை விட வேண்டியதாயிருந்தது. அவர் ஒருநாள்
D.L. மூடி பிரசங்கியாரின் செய்தியை கேட்டு இவ்வாறு தீர்மானித்தார், “என்னால் பிரசங்கிக்க முடியாது, ஆனால் சிறந்த தொழிலதிபராக முடியும். ஆண்டவரே உமக்கு சித்தமாயிருந்தால் நான் ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல லாபம் அடைய உதவி செய்யும். உண்மையாக உம்முடைய ஊழியத்தை தாங்குவேன்” என்று பொருத்தனை செய்தார். பின் ஓஹியோ என்னுமிடத்தில் Quaker Mills என்னும் சிறிய ஓட்ஸ் தயாரிக்கும் ஆலையை ஆரம்பித்தார். 10 வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் ஓட்ஸ் (oats) காலை உணவாக மாறியது. அவரும் தசமபாகத்தை உண்மையாக கொடுக்க ஆரம்பித்தார். இன்றும் (Quaker oats) உலகமெங்கும் பரவி, அநேகர் பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனின் உண்மையினால், அவனுடைய செய்கைகளையும் தொழிலையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
பரிசுத்த வேதாகமத்தில் எலியா என்ற தீர்க்கதரிசியை நாம் அறிவோம். வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அப்பொழுது எலியா, பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்துமா அவனுக்குள் திரும்பி வந்தது. இதனை பார்த்த அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும் சாட்சி கொடுக்கிறாள். எலியாவின் வாயிலிருந்து உண்மையான தீர்க்கதரிசன வார்த்தைகள் மரித்துப்போன பிள்ளையை உயிர்ப்பித்தது.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! உண்மையுள்ள மனுஷன்தான் பரிபூரணமான ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும். இன்று நாம் இயேசுவை உண்மையாய் தேடுகிறோமா? அவரிடத்தில் ஜெபிக்க வேண்டிய வேளைகளில் உண்மையாய் ஜெபிக்கிறோமா? வேதத்தை வாசிக்க வேண்டிய காரியங்களிலும், அதனை தியானம் செய்கின்ற வேளைகளிலும் நம்மிடம் உண்மையுள்ளதா என சற்று சிந்திப்போம். இன்னும் கூட இதை வாசிக்கின்ற நீங்கள் ஒரு சிறு தொழில் செய்பவராக கூட இருக்கலாம். உங்களது தொழிலில், கல்வியில், வருமானத்தில் உண்மை இருக்கிறதா? நம்முடைய காரியத்தில் நாம் தேவனுக்கு முன்பாக உண்மையாய் இருப்போம் என்றால் நாம் அவரிடமிருந்து பூரண ஆசீர்வாதங்களை பெற்றிடலாம். எனவே நம்முடைய செய்கைகளிலும், நம்முடைய வாயின் வார்த்தைகளிலும் உண்மையாய் இருப்போமாக!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது சிறுவர் இல்ல பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250