By Village Missionary Movement
Sunday, 24-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 25-10-2021
உருவாகுவோம் – உருவாக்குவோம்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.” -நீதி. 2:6
கவின் என்ற சிறுவன் பிறந்ததிலிருந்தே குறும்புத்தனமாக இருந்தான். படிப்பிலும் சற்று கவன குறைவாகவே இருந்தான். அவனுடைய அப்பாவிற்கு இது மிகவும் வருத்தமாக இருந்தது. அதனால் தன் மகன் செய்யும் குறும்புகளை பார்க்கும்போது உனக்கு அறிவும் இல்லை, புத்தியும் இல்லை என திட்டுவது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு திட்டும்போது கவின், “அறிவு, புத்தி-னா என்னப்பா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டான். உடனே அப்பா, “ஒருவன் கற்றுத் தேர்ந்த அறிவும், அவன் அனுபவத்திலிருந்து சொல்லும் புத்திமதிகளும் ஒரு மனிதனை உருவாக்கும்” என்றார். சற்றும் சிந்தியாமல் கவின், “அப்போ உங்களுக்குத்தான் அறிவும், புத்தியும் இல்லை, இருந்திருந்தால் நான் உருவாகியிருப்பேனே” என்றான்.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் உலாவிய காலங்களில் வியாதியினால், பெலவீனங்களால் சோர்ந்து போய் இருந்த பலருக்கும் சுகம் தந்து அவர்களை கட்டுகிற, உருவாக்குகிற வார்த்தைகளாக கூறினார். மேலும் அவருடைய சீஷர்களாக, படிக்காத மீனவர்களையும், பாவியான ஆயக்காரர்களையும் தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்து போதித்து, அவர் பரலோகத்திற்கு சென்ற பின்னும் பரிசுத்த ஆவியைத் தந்து அவர்களை அப்போஸ்தலர்களாக அநேகரும் ஆச்சரியப்படும் வண்ணம் மாற்றினார். பேதுருவும் கூட அன்பின் போதகத்தைக் கேட்டிருந்தும், இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டதும் ஒருவனை வலது காதற வெட்டினான், மூன்று முறை மறுதலித்தான், முன்கோபத்தால் புத்தியில்லாதவனாக செயல்பட்டான். ஆனாலும் தன் தவறை உணர்ந்து மீண்டும் தன்னை தேவனிடம் அர்ப்பணித்ததும் தேவன் அவனுக்கு பொறுமையையும், அன்பையும் தந்து அவர் மூலமாய் ஆயிரமாயிரமான மக்கள் தேவனை அறியும்படி செய்தார். பேதுருவைக் கொண்டு ஆதித்திருச்சபையே உருவானது, விரிவானது எனலாம். அப்போஸ்தலர்களை தலைமையேற்று நடத்துபவராக இருந்தார்.
பிரியமானவர்களே! நீங்களும் எனக்கு அறிவும் இல்லை, புத்தியும் இல்லை என எண்ணுகிறீர்களா? பேதுருவைப் போல் தேவன் உங்களையும் அநேகரை வழிநடத்தக் கூடியவர்களாக, மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுபவராக, உங்கள் நிழலை நாடி அநேகர் வரும்படியாக மாற்ற முடியும். அவரிடம் பேதுருவைப் போல உங்கள் எல்லா காரியங்களையும் தந்து ஞானத்தை, புத்தியை கேட்டு அர்ப்பணித்தால் போதும். தேவனிடம் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் உண்டு. அவைகளைக் கொண்டு உங்களை உருவாக்கி, அநேகரை உருவாக்குகிறவர்களாக மாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
- Sis. விஷாலி
ஜெபக்குறிப்பு:
இராக்லாண்டு பைபிள் காலேஜ் மாணவர்கள் தங்குவதற்கென கட்டப்படும் கட்டிடப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250