By Village Missionary Movement
Tuesday, 19-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 20-10-2021
சாதகமா, பாதகமா?
“...நீதிமான்களுடைய வேரோ அசையாது.” – நீதிமொழிகள் 12:3
வேதத்திலே தேவன் நீதிமான்களை பனைமரத்தோடும், லீபனோனின் கேதுரு மரத்தோடும் ஒப்பிட்டு கூறுவதை வாசிக்கிறோம். பனை மரமானது மிக உஷ்ணமான இடத்தில் வளரக்கூடியது. அதற்கு எவரும் தண்ணீர் ஊற்றுவதோ, பராமரிப்பதோ கிடையாது. இருப்பினும் கடுமையான வறட்சியிலும் கூட பனைமரம் கருகிப் போகாமல் வளரும், அதன் அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியது. அதே போன்று லீபனோனிலுள்ள கேதுரு மரத்தைக் குறித்து சங். 92:12ல் விசேஷத் தன்மையுடன் கூறப்படுகிறது. லீபனோன் என்பது வெண்மையான பனி சூழ்ந்த பகுதி. பனியில் எந்தவொரு தாவரமும் செழித்து வளர வாய்ப்பில்லை. ஆனால் அங்கு கேதுரு மரம் சுமார் 160 அடி வரை வளரும். மலைகளை குடைந்து சுமார் 180 அடி ஆழம் வரை அதன் வேர் சென்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கும். கடுமையான குளிர்ச்சியிலும் இம்மரம் தாக்குப்பிடித்து வளர்கிறது.
இதேபோன்று வேதத்தில் ரூத், ஒர்பாள் இருவரையும் பார்க்கும்போது ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர்கள் என்றாலும் மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வரும் வழியில் நகோமி தன் மருமகள் இருவரிடமும் தன் இயலாமையை விளக்குகிறாள். பாதகமான சூழ்நிலையை அறிந்த ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டு அவள் தன் சொந்த தேசமான மோவாப் திரும்புகிறாள். ஆனால் ரூத்தோ அந்த கடினமான அந்த சூழ்நிலையிலும், அவள் தன் வயதான மாமியை நம்பி, இளம்பெண்ணாய் தனக்கு தெரியாத அந்த தேசத்தை நோக்கி மாமியின் பின்னே செல்கிறாள். தன் மாமியிடம், “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்தில் தங்குவேன், உம்முடைய ஜனம் என் ஜனம், உம்முடைய தேவன் என் தேவன், மரணமேயல்லாமல் வேறொன்றும் பிரிப்பதில்லை” என்று விடாமல் பற்றிக் கொண்டாள். அந்நிய தேசத்தாள் ஆயினும் அவளுடைய வேரையும் தேவன் வேர் பற்ற செய்தார். மத். 1:5ல், தாவீதின் வேரும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றாள். ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அதன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பி செழிக்கும் என்ற வார்த்தை எத்தனை உண்மை!
ஆம் தேவப்பிள்ளைகளே! நீதிமான் வேர் அசையாது. அவன் வேரூன்றி நிலைத்திருப்பான். கடுமையான சூழ்நிலையோ, வாழவே இயலாத சூழ்நிலையோ, கடுமையான உபத்திரவமோ எதுவாயினும், சூழ்நிலை சாதகமோ இல்லை பாதகமோ எதுவாயினும் நிலைத்திருந்து பலன் கொடுக்கிறவர்களாய் இருப்பர். நாமும் நீதிமான்களாய் இவ்வுலகில் வாழ்வோம்.
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
“கழுதைகள் கையேடு” பத்திரிக்கை வாசிக்கும் ஊழியர்கள் தேவனுக்கென்று அக்கினி ஜீவாலையாக பற்றியெரிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250