By Village Missionary Movement
Tuesday, 19-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 19-10-2021
ஏரியில் குமிழிகள்
“என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.” – நீதிமொழிகள் 3:11
சிறுவன் ஒருவன் சிறிய விளையாட்டு படகொன்றை சிறிய ஏரியில் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கரையில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த படகு மெல்ல மெல்ல அவனுடைய கைக்கு எட்டாத தூரத்திற்கு சென்றுவிட்டது. ஐயோ! நான் என்ன செய்வேன் என்று அவன் கலங்கின வேளையில் அவனை விட சற்று பெரிய பையன் தற்செயலாக அங்கே வந்தான். உடனே அவனிடம், “ அண்ணா என்னுடைய படகு வெகுதூரம் சென்றுவிட்டது. எப்படியாவது எனக்கு அதை மீட்டுத்தாருங்கள்” என்று கேட்டான். உடனே அந்த பையனும் ஒரு வார்த்தையும் சொல்லாமல் கரையில் இருந்த சில கற்களை எடுத்து அந்த படகை நோக்கி வீசத் தொடங்கினான்.
சிறுவனுக்கோ நான் உதவி கேட்டால் இந்த அண்ணன் அதன் மேல் கல்லெறிகிறானே என்று வருத்தம் ஏற்பட்டது. ஆனால் அவன் சற்று உற்றுப் பார்த்தபோது அந்த கற்கள் அந்த படகின் மீது படாமல் அதற்கு அப்பால் விழுந்து சிறுகுமிழிகளை ஏற்படுத்தி, அந்தப் படகை அந்த குமிழிகள் கரைக்கு பக்கத்தில் தள்ளி கொண்டிருந்தன. ஒவ்வொரு கற்களும் நன்கு திட்டமிடப்பட்டு சரியான இடத்தில் எறிந்தபடியால் சீக்கிரமே அதிலிருந்து ஏற்பட்ட குமிழிகள் (bubbles) அந்த படகை கரைக்கு சேர்த்து, அந்த சிறுவனின் கையில் கிடைக்க வைத்தது.
சில வேளைகளில் கர்த்தர் சிட்சைகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்று நாம் நினைத்து கவலை கொள்கிறோம். நாம் எப்போதும் அவரை விட்டு விலகிச் செல்கிறவர்களாக இருக்கிறபடியால் கர்த்தர் நம்மை அவரிடம் சேர்க்கும்படியாக நமக்கு சில சிட்சைகளை அனுப்புகிறார்.
“பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்” என்பதற்கேற்ப பெற்றவர்களே பிள்ளையின் தவறைக் கண்டித்து உணர்த்தி திருத்தும் போது, நாம் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் பிழைக்கத்தக்கதாக நம் தேவாதி தேவனுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா? பெற்றவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். நம் தேவனோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே சிட்சிக்கிறார்.
நம் வாழ்வில் ஏற்படும் சிட்சைகள் கர்த்தர் நம்மை நேசிப்பதினாலும், நம்மை அவரிடம் கிட்டி சேர்ப்பதற்காகவுமே அனுமதிக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதை அற்பமாக எண்ணாதபடி அந்த சிட்சையை எதற்கு அனுப்பினார் உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நம் பிரயோஜனத்திற்காகவும், அவரை நெருங்கி ஜீவிக்கவும் கர்த்தர் நமக்கு அனுமதிக்கிற சிட்சைகளுக்காக நாம் தேவனைத் துதிப்போமா? நெருங்கி இன்னும் அவரண்டை செல்வோமா?
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
ஊழியர்களுக்கென பிரத்யேகமாக வெளியிடப்படும் “ கழுதைகள் கையேடு “ பத்திரிக்கைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250