By Village Missionary Movement
Wednesday, 13-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 13-10-2021
நல்ல நண்பன்
“மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.” – நீதிமொழிகள் 27:5
புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஒருவர் ஒருமுறை சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென தனது பள்ளிப்பருவ நண்பனைப் பார்த்தார். பார்த்த உற்சாகம் மற்றும் சந்தோஷத்தில், “நீயும் ஒரு சிகரெட் பிடி” என்றார். அந்த நண்பரோ “எனக்கு வேண்டாம், நான் சிகரெட் பிடிப்பதில்லை” என்றார். இருவரின் பேச்சும் தங்களின் பள்ளிப் பருவத்தை நோக்கிப் போனது. மகிழ்ச்சியோடு பேசினார்கள். இந்த நபர் அதற்குள் இன்னொரு சிகரெட்டை பற்றவைத்தார். இதைப் பார்த்த அவரின் நண்பர், “நண்பா! நீ இந்த சிகரெட்டை எடுத்து உனது இந்த அழகான காட்டன் சட்டையில் தேய்த்து அணைத்துவிடு பார்ப்போம்” என்றார். அதற்கு அவர், “அட முட்டாளே! 1000 ரூபாய் காட்டன் சட்டை ஓட்டை விழுந்துவிடும் தெரியாதா உனக்கு?” என்று சொல்ல, அந்த நண்பர், “நண்பா 1000 ரூபாய்க்காக நீ கவலைப்படுகிறாய், ஆனால் விலைமதிக்க முடியாத உனது இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளை சிகரெட் பிடித்து கெடுத்துக் கொள்கிறாயே அடிமுட்டாளே!” என்றார். அந்த நபர் மிகவும் அதிகமாய் யோசித்துப் பார்த்தார்.
பரிசுத்த வேதாகமத்தில் சாமுவேல் என்ற தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜவாகிய சவுலின் தவறை சுட்டிக்காட்டுவதை 1சாமு. 15-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அமலேக்கியரை முழுவதுமாக அழித்துப் போட வேண்டும் என்பதுதான் தேவன் சாமுவேல் மூலமாக சவுலுக்கு சொன்னது. ஆனால் சவுலோ அப்படி செய்யாமல் தன் இஷ்டப்படி கொழுமையான ஆடுமாடுகளையும், சில வஸ்துக்களையும் விட்டுவிட்டான். இந்தக் காரியம் சாமுவேலுக்கு தெரிய வந்தபோது சாமுவேல் வெளிப்படையாக சவுலினிடத்தில், “கர்த்தர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார்” (1 சாமு.15:23) என்று கூறியதைப் பார்க்கிறோம். சாமுவேல் அந்த அதிகாரம் முழுவதும் சவுலைக் கண்டித்துப் பேசியதைப் பார்க்க முடிகிறது. அப்புறம் சொல்லிக்கொள்ளலாம், தவறாக நினைத்துவிடக் கூடாது என்றெல்லாம் யோசிக்காமல் வெளிப்படையாக கடிந்து கொண்டார்.
நண்பர்களே ! இன்றைக்கு நமது நிலைமை எப்படி ? நாம் நல்ல நண்பர்களாய், உண்மையான நண்பர்களாய் இருக்கவேண்டும் என்றால் வேத வசனத்தின்படி நடக்க முயற்சிப்போம். நமது நண்பன் தவறு செய்யும்போது நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நாமே அவர்களுக்கு குழிதோண்டும் எதிரியாகிவிடுவோம்! இந்த நாட்களில் நண்பர்களோடு செலவழிக்க அதிக நேரம் கிடைக்கிறது. இந்த நேரத்தை நாம் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம். நண்பன் நம்மை தவறாக நினைத்து விடுவானோ என்றில்லாமல் தவறை வெளிப்படையாக கடிந்து கொள்வதுதான் வேதம் காட்டும் வழி. நாம் நல்ல நண்பனாய் இருப்போம்! நமக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்!
- T.சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் ஊழியம் செய்ய ஒத்த தரிசனமுள்ள ஊழியர்கள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250