By Village Missionary Movement
Friday, 08-Oct-2021இன்றைய தியானம்(Tamil) 08-10-2021
கட்டைவிரல்
“ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.” - நீதிமொழிகள் 4 : 7
ரிச்சர்ட் உம்பிராண்ட் கடவுளில்லை என சாதிக்கும் ரஷ்ய மக்களிடையே
ஊழியம் செய்து கொண்டிருந்தபோது சிலை செய்யும் ஒரு தம்பதியினரைச்
சந்தித்தார். அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட விதத்தை கூறினது பின்வருமாறு: சிலை ஒன்றை செய்துகொண்டிருந்தபோது அவரது மனைவி அவரைப் பார்த்து நமது கைகளிலுள்ள பெருவிரல்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பெருவிரல் மற்ற விரல்களுக்கு எதிராக அமைக்கப்படாமல், கால் விரல்களைப் போலவே ஒரே அடுக்கில் இருந்திருக்குமானால் சுத்தியலையோ, எந்த ஒரு பொருளையோ, புத்தகத்தையோ அல்லது ரொட்டித் துண்டையோ நான் கையினால் எடுக்க முடியாதே!
இயல்பான மனித வாழ்க்கை இந்தச் சின்ன பெருவிரல் இல்லாமற்போனால் சாத்தியமாகாதே. இப்படியிருக்க, இந்தப் பெருவிரலை ஞானமாய் உண்டாக்கினது யார்? வானமும், பூமியும் தானாகவே உண்டாயினவென்று பள்ளிக்கூடத்தில் படித்து அறிந்திருக்கிறோம். அவைகள் தேவனால் உண்டாக்கப்பட்டவைகள் அல்லவென்றே நான் இந்நாள்வரை கற்றும் நம்பியும் வந்திருக்கிறேன். அவ்வாறே தேவன் வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவராய் இல்லாமல் இந்த பெருவிரலை உண்டாக்கினவராயிருந்தால் கூட அவர் போற்றத்தகுந்தவரே. மின்சார பல்பு, டெலிபோன் கருவி, புகை வண்டி ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களான எடிசன், பெல் ஸ்டீபன்சன் இவர்களையே நாம் போற்றும்போது, பெருவிரலைக் கண்டுபிடித்தவரை ஏன் நாம் போற்றக்கூடாது? எடிசனுக்குப் பெருவிரல் இல்லாதிருந்திருக்குமானால் அவர் ஒன்றையும் கண்டுபிடித்திருக்க முடியாதே? ஆகையால் பெருவிரலை படைத்த தேவனை ஆராதிப்பது சரியானதே என்று மனைவி கூறினாள். அநேக சமயங்களில் மனைவிகள் ஞானமாகப் பேசும்போது கணவருக்கு கோபம் வருவது போல இதைக்கேட்ட அவரும் மிகவும் கோபம் கொண்டு இப்படி மதியீனமாய் பேசாதே என்றார். ஆனாலும் மனைவியின் ஞானமான கேள்வி அவரை ஆண்டவருக்கு நேராய் திருப்பியது.
பரிசுத்த வேதத்தில் பார்க்கும்போது கர்த்தர் சாலொமோனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று சொன்னபோது ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் என்று சாலொமோன் கேட்டார். அது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
தேவனுக்குப் பிரியமானவர்களே! நாம் ஞானமில்லாமல் செய்கிற செயல்களினிமித்தம் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறோம். சாலொமோனைப் பார்க்கும்போது ஆண்டவரிடத்தில் ஞானத்தைக் கேட்கிறார். நாம் நம்முடைய ஜெபத்தில் எதை கேட்கிறோம்? சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஞானம் மிக முக்கியம். ஒவ்வொருநாளும் ஆண்டவரிடம் ஞானத்தைக் கேட்டு அதன்படி செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.
- P. சிவா
ஜெபக்குறிப்பு;
மீடியா ஊழியங்களுக்குத் தேவையான சாதனங்கள் வாங்கப்பட ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250