By Village Missionary Movement
Thursday, 23-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 23-09-2021
லூக்கா
“லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான்.” – 2 தீமோத்தேயு 4:11
டேனி என்ற ஓவியனின் மேஜையில் இருந்த பேப்பரும் பென்சிலும் கொஞ்ச நாட்களிலேயே நண்பர்களாயின. ஒருநாள் டேனி நாற்காலியில் அமர்ந்து பென்சிலை எடுத்ததும் பேப்பர் மிகவும் அழுதுவிட்டு, “நான் வரமாட்டேன்” என்றது. டேனி வேறு பேப்பரை எடுத்து வரைய ஆரம்பித்தார். பென்சிலுக்கு வருத்தம், “ஏன் அழுதாய்?” என பேப்பரிடம் கேட்டது. “டேனி உன்னை கையில் எடுத்தாலே கூர்மையான ஆயுதம் கொண்டு உன்னை சீவி உன்னை துன்பப்படுத்துவார். அப்போது நான் வந்தால் உன் கூரிய முனை என்னை குத்தும் எனக்கு வலிக்கும். நான் என் தூய்மையையும் இழந்து விடுகிறேன்” என்றது. பென்சில் சொன்னது, “நாம் கஷ்டப்பட்டாலும் மிகவும் அழகாகவும், பெருமைக்குரியவர்களாகவும் மாறுகிறோம். நான் கூர்மையான முனையுடையவனாக இருந்தால், எவ்வளவு அழகான ஓவியத்தை வரைந்து விடுகிறேன். நீ வெண்மையாக இருப்பதைவிட, உன்னில் பல டிசைன்கள் வரையப்பட்டு இருப்பது எவ்வளவு பெருமை! விலை மதிப்புடையவனாக மாறுகிறாய்! இது உனக்கு பெருமை அல்லவா!” என்றது.
இந்த பேப்பரைப் போலத்தான் மனிதர்களும் நாம் கஷ்டப்படும்போது விட்டுவிட்டு ஓடிவிட நினைக்கின்றனர். ஆனால் அப்போஸ்தல நடபடிகளையும், லூக்கா சுவிசேஷத்தையும் எழுதிய லூக்கா என்ற தேவமனிதர் எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் பவுலோடு இணைந்து தன் ஊழியத்தை நிறைவேற்றினார். பவுல் சுவிசேஷத்தினிமித்தம் சிறையிலடைக்கப்பட்ட நேரத்திலும் லூக்கா அவரை விட்டு ஓடிவிடாமல் கூடவே இருந்தார். லூக்கா ஒரு மருத்துவர்! நன்கு படித்தபோதிலும், சமுதாயத்தில் நல்ல நிலையிலுள்ளவராக இருந்தாலும் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினிமித்தம் எல்லா சூழலிலும் பவுலோடு இருக்கிறார். தீமோத்தேயுவுக்கு சிறையிலிருந்து கடிதம் எழுதும்போது பவுல் கூறுகிறார், “லூக்கா மாத்திரம் என்னோடு இருக்கிறான்” (2தீமோ. 4:11) என்றார். தன் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்தினார்.
பிரியமானவர்களே! லூக்காவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொண்ட காரியங்கள் நம் வாழ்வில் உண்டா? என சிந்திப்போம். எல்லாச்சூழலிலும் சுவிசேஷத்தை வெட்கப்படாமல் போதிக்கிறவராக இருந்தார். கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டவராக இருந்த பவுலுக்கு உதவுபவராக இருந்தார். நாமும் கூட எல்லாச்சூழலிலும் ஊழியர்களுக்கு உதவுவோமா? அவர்களுடைய கஷ்டங்களிலும் வெட்கப்படாமல் அவர்களோடு தோள் கொடுக்கிறவர்களாக இருப்போமோ? லூக்கா அவ்வாறு இருந்ததால் கிறிஸ்துவின் சீஷராக இல்லாதபோதிலும் கூட இரண்டு நிருபங்களை எழுதும்படி ஆவியானவர் உடனிருந்து நடத்தினார். அதேபோல நாமும் இருக்கும்போது ஆவியானவர் இம்மையிலும், மறுமையிலும் நம்மை மேன்மைப்படுத்தி வைப்பார் என்பதில் சந்தேகமில்லை.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான இதழை அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250