By Village Missionary Movement
Wednesday, 22-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 22-09-2021
எழும்பு
“அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ் செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.” – சங்கீதம் 106:30
தேவாதி தேவன் தம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததியை கொடிய இருப்புகாளவாயாகிய எகிப்திலிருந்து பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்கு அழைத்து வரும் வழியில், பாலாக் என்கிற மோவாபிய ராஜாவும் கூலிக்காக வஞ்சனை செய்யும் பிலேயாம் என்பவனும் இணைந்து செய்த சதியினால் இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள். ஆகையால் வாதை அவர்களுக்குள் இப்படி புகுந்தது. இஸ்ரவேலரின் மேல் வாதை வர காரணமாயிருந்த விபசார பாவத்தை நிறுத்த பினெகாஸ் எழுந்து நின்று நியாயம் செய்தான் என்று சங்கீதம் 106-ல் வாசிக்கிறோம். நம் தேவனை மிகவும் கோபப்படுத்திய அந்த சம்பவம் நடந்தபோது பினெகாஸ் பாவம் செய்கிற கூட்டத்தோடு உழன்று கொண்டிருக்கவில்லை. அதேபோல் வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலும் அவர் இருக்கவில்லை. மாறாக, ஆசரிப்புக் கூடாரவாசலில் நடுச்சபையில் மோசேயோடு கூட அழுது கொண்டிருந்தான். எனவேதான் சிம்ரியையும், கஸ்பியையும் கொன்று போடுவதற்கு வைராக்கியத்தையும், பெலனையும் பெற்றான். நாமும் இதுபோல தேவனுக்காக வைராக்கியம் பாராட்டவேண்டுமெனில் தெலீலாளின் மடியில் நித்திரை செய்யும் சிம்சோனை போலல்ல, கண்களுக்கு மையிட்ட யேசபேலின் முன் மயங்காமல், அவளை நிர்மூலமாக்கிய யெகூவைப் போல வாழ நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
இப்படி பினெகாஸ் எழுந்து நின்று தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்ததினால் அவனுக்கு கிடைத்த அநேக நன்மைகளில் ஒன்று எண்ணாகமம் 25:13-ன்படி அவனுக்குப்பின் அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று கர்த்தர் உரைத்தார். அதோடு மாத்திரமல்ல 1நாளாகமம் 9:20 வசனத்தின்படி பினெகாஸ் இஸ்ரவேலர்கள் மேல் விசாரணைக்காரணாயிருக்கத்தக்கதாக அதிகாரத்தையும் ஆண்டவர் கொடுத்திருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். எனவே நாமும் இயேசுவுக்காக இப்படி எழுந்து நின்று காரியங்களை செய்யும்போது நம் மூலமாகவும் ஆண்டவர் தம்முடைய ஜனங்களின் வாதைகளை நீக்குவார். நம்மையும் நம் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார் என்பதை அறிந்துகொள்ளலாம். எனவே பினெகாஸிடமிருந்த இப்படிப்பட்ட வைராக்கியத்தை தேவனிடத்தில் கேட்டுப் பெற்று அவருடைய நாம மகிமைக்காகவும் நமக்கும் நம் சந்ததிக்கும் ஆசீர்வாதமாகவும் நாம் வாழ்வோம்.
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை TV மற்றும் சத்தியம் TV யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் தேவனை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250