By Village Missionary Movement
Tuesday, 21-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 21-09-2021
மதியற்ற பறவையும்- புழு வியாபாரியும்...
“என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.” – யாக்கோபு 1:16
மிகவும் அழகான வர்ணங்களைக் கொண்ட வண்ணப்பறவையொன்று இரைக்காக அங்குமிங்கும் பறந்து திரிந்து இரையொன்றும் கிடைக்காததால் மிகுந்த பசியுடன் ஓரிடத்தில் வந்து அமர்ந்தது. அவ்விடத்தில் ஒரு புழு வியாபாரி புழுக்களை பணத்திற்கு விற்று வியாபாரம் செய்து கொண்டிருந்தான். மிகுந்த பசியோடிருந்த வண்ணப்பறவை இதைப் பார்த்தவுடன் ஒரு புழு தருமாறு கேட்டது. அதற்கு வியாபாரி பணம் தருமாறு கேட்டான். வண்ணப்பறவை தன்னிடம் காசு இல்லாததால், “பல வர்ணங்களால் மெருகேற்றப்பட்டிருந்த இறகில் ஒரு இறகை தருகிறேன்” என்றது. அதை கேட்ட வியாபாரி, இது அழகாக உள்ளது. இதை விற்றால் பணம் கிடைக்கும் என்றெண்ணி, அதனுடைய ஒரு இறகை வாங்கிக் கொண்டு ஒரு புழுவைக் கொடுத்தான். மிகவும் பசியோடிருந்த பறவை மிக ஆவலுடன் புழுவை வாங்கி சாப்பிட்டது. மிகுந்த பசியோடிருந்ததால் ஒரு புழு அதற்கு போதுமானதாய் இல்லை. உடனே வியாபாரியிடம் இன்னுமொரு புழு தருமாறு கேட்டது. அவனும், மற்றும் ஒரு இறகை வாங்கிக்கொண்டு புழுவைக் கொடுத்தான். இப்படியே தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தன்னிடமிருந்த எல்லா இறகுகளையும் கொடுத்து தீருமட்டும் உணர்வற்றதாய் தன் இறகுகளனைத்தையும் வியாபாரியிடம் கொடுத்து புழுவை வாங்கிக் கொண்டது. வண்ணப்பறவை இப்பொழுது சிறகில்லா பறவையாகிவிட்டது. சரி திருப்தியாக உள்ளது கூட்டுக்குப் போகலாமென்றெண்ணி பறக்க முயன்றபோது அந்தோ பரிதாபம் பறக்க இயலாமல் தவித்தது. வியாபாரியோ தன் வழியாய் போய்விட்டான். அப்பொழுதுதான் தன் புத்தியீனத்தை உணர்ந்தது வண்ணப்பறவை. சிலமணி நேரத்திற்குள் மற்ற பறவைகளுக்கு உணவானது.
ஆம், இதை வாசிக்கும்போது வண்ணப்பறவையின் மேல் பரிதாபமும் வியாபாரியின் மேல் கோபமும் எழும்பலாம். இதை வாசிக்கிற நீங்கள் வண்ணப்பறவையைப்போல் மதியற்றவர்களாய் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் நன்மையை இழந்து கொண்டிருக்கிறீர்களா? கயவனான சத்துரு இந்த வியாபாரியைப் போலத்தான், ஆசை இச்சைகளை தூண்டி தேவன் நமக்கு தந்த நன்மையான ஈவுகளை கொள்ளையாட வலைவீசித் திரிவான். (1பேதுரு 5:8)ல் எழுதியிருக்கிறபடி உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். ஆகவே இதே வசனத்தின் பகுதியில் சொல்லியிருக்கிறபடி தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். விழித்திருங்கள் என்றபடி நம் வாழ்வில் தேவன் தந்த ஈவுகளை அற்பமான சுகத்திற்காக இழந்து போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள். தேவன் அருள்புரிவாராக!
- Sis. ஜெபின்
ஜெபக்குறிப்பு:
தேவன் நமக்கு தந்த தரிசனத்தை நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து 12 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250