By Village Missionary Movement
Monday, 20-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 20-09-2021
சோதனைகளை வெல்லுங்கள்
“உங்கள் திராணிக்குமேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல்....சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” – 1கொரிந்தியர் 10:13
ஒருநாள் பாபு என்ற சிறுவனின் தாய் 4 கேக்குகளைச் செய்து வைத்துவிட்டு கடைக்குச் சென்றார்கள். வெளியே செல்வதற்கு முன், கேக்குகளை மாலை சிற்றூண்டிக்காக செய்து வைத்திருப்பதாகவும், அதற்குமுன் சாப்பிட்டுவிடக் கூடாதென்றும் பாபுவிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள். கேக்கின் வாசனை மூக்கைத் துளைத்ததால் ஆசையை எவ்வளவோ அடக்கிப் பார்த்தும் பாபுவால் முடியவில்லை. 3 கேக்குகளை காலி பண்ணிவிட்டான். வீடு திரும்பிய தாய் இதை அறிந்தவுடன் பாபுவின் தவறிற்காக அவனைக் கண்டித்தார்கள். அவனோ, “அம்மா! கேக்கின் மணத்தை அறியாதிருக்க மூக்கை கெட்டியாகப் பிடித்திருந்தேன். மூச்சுத் திணறியதால் கையை எடுத்துவிட்டேன். பின்னர் என் கால்கள் கீழ்ப்படியாததால் சமையலறைக்குள் சென்றேன். அங்கு போனவுடன் என் கையும் வாயும் கூட எனக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டன” என்றானாம்.
ஆம், அன்பானவர்களே, நாமும் கூட சில தவறுகளைத் துணிகரமாக செய்துவிட்டு சூழ்நிலைமீதோ, சில நபர்கள்மீதோ, பிசாசின்மீதோ பழி சுமத்தி விடுகிறோம். ஏவாள் சர்ப்பத்தின் மீதும், ஆதாம் ஏவாளின் மீதும் பழி சுமத்தியதைப் போல, உண்மையில் சோதனைக்கு யார், எது காரணம்? “அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்.” (யாக்கோபு 1:14) என்று வேதம் கூறுகிறது. நம் இச்சைகள், சோதனை தரும் சூழ்நிலைகள், பொருட்கள், நபருடன் இணையும்போது சோதனையில் வீழ்ந்துவிடுகிறோம். பண ஆசை உள்ள ஓர் மனிதன் லஞ்ச ஊழலில் சிக்கி விடுகிறான். பொருளாசை திருட்டுக்கு வழி வகுக்கிறது. மாம்ச இச்சை விபசாரத்தில் வீழ்த்துகிறது.
பறவைகளைக் கவனித்துப் பார்த்தால் அவை ஒரு இடத்தில் அமர்வதற்கு முன்போ அல்லது இரையை உண்ணும்போதோ கூட தன்னைச் சுற்றிலும் ஏதாவது ஆபத்து இருக்கிறதா? என்பதை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கின்றன. நாமும் ஒவ்வொரு நாளும் நமக்கு வரக்கூடிய சோதனைகளைக் குறித்து விழிப்பாயிருந்து ஜெபிக்க வேண்டும். சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபிக்க இயேசு ஆலோசனை கொடுக்கிறார். (மாற்கு 14:38) கர்த்தருடைய ஜெபத்திலும், சோதனைக்குட்பட்டு, தீமையில் அகப்பட்டுவிடாதபடி ஜெபிப்பதற்குக் கற்றுக் கொடுக்கிறார்.
இறுதியாக இயேசு செய்தது போல, வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, சோதனைக்காரனாகிய பிசாசை எதிர்த்து நிற்க வேண்டும். சோதனைகளை வெல்ல கர்த்தர் காட்டியிருக்கும் வழிகளைப் பின்பற்றுவோமாக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகள் மூலம் 1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250