By Village Missionary Movement
Thursday, 09-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 09-09-2021
ஒற்றுமை
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” - சங்கீதம் 133:1
ஒரு விவசாயியின் வீட்டில் எலி, கோழி, பூனை, ஆடு இருந்தது. விவசாயி எலி பெருகிவிட்டதே அதை ஒழிக்க வேண்டும். அதற்காக நான் எலி பிடிக்க பொறி வாங்கி வருகிறேன் என்றார். எலி உடனே கோழியிடம் போய் இதனைக் கூறி உதவி கேட்டது. கோழி சொன்னது, “உனக்கு உதவி செய்ய என்னால் முடியாது” என்றது. ஆட்டிடம் சென்றது. ஆடு, “செல்லமாக வளரும் நானே வீட்டினுள் எப்போதாவது அனுமதிக்கப்படுகிறேன். நீ எப்போதும் உள்ளே இருந்து ஆடினாயே உனக்கு நல்லா வேண்டும்” என்றது. எலி பூனையிடம் உதவி கேட்டது. பூனை சொன்னது, “ என்னால் தான் முடியவில்லை அவராவது அந்த நல்ல காரியத்தை செய்யட்டும்” என்றது. விவசாயி பொறியை வாங்கி வைத்தார். எலியை பிடிக்காத பூனை வேண்டாமென்று பூனையை பிடித்து காட்டிற்குள் விட்டார். விவசாயியின் மகள் அறியாமல் பொறியில் கையை வைக்க டப் என்ற சத்தத்துடன் மகள் அலறினாள். அப்பா விரைந்து வந்தார். விவசாயி மகளின் கை மாட்டிக்கொண்டது, இரத்தம் அதிகம் வந்தது. வைத்தியரிடம் அழைத்து சென்றார். நாட்டு கோழி கறி சமைத்து கொடுக்கச் சொன்னார். கோழி காலியானது. சுகமானவுடன் ஒரு நன்றி கூட்டம் வைத்தார். அதற்கு ஆட்டை அடித்து சமைத்தார் விவசாயி. எனக்கு உதவி செய்திருந்தால் எல்லோரும் உயிரோடு பிழைத்திருக்கலாம். இப்போது நான் மட்டும் உள்ளேன் என நினைத்தது எலி.
வேதத்திலே திமிர்வாதம் என்னும் வியாதி வந்து செயல்பட முடியாமல் படுத்த படுக்கையாய் இருக்கும் தங்களின் நண்பனை மற்ற 4 நண்பர்கள் இயேசுவிடம் அழைத்துச் செல்ல எண்ணினர். அதற்கு மிகுந்த யோசனை செய்து படுக்கையுடன் தூக்கிச் செல்ல முடிவெடுத்து தூக்கிச் சென்றனர். ஆனால் அவர்களால் இயேசுவின் அருகில் செல்ல முடியவில்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் கூரை மேல் ஏறி கூரையைப் பிரித்து தன் நண்பரை இயேசுவின் முன் இறக்க முடிவெடுத்தனர். இயேசு இந்த நான்கு நண்பர்களின் ஒரு மனப்பட்ட விசுவாசத்தை கண்டார், சுகம் கொடுத்தார்.
இதனை வாசிக்கும் அன்பரே! நீங்கள் வசிக்கும் இடத்தில் அருகில் உள்ளவருடன், வேலை செய்யுமிடத்தில் உடன் பணிபுரிபவருடன் எப்படி இருக்கிறீர்கள்? ஒற்றுமையாக இருக்கிறீர்களா? கசப்பு, வெறுப்பு இல்லாமல் மன்னிப்பு, சகிப்புடன் இருக்கிறீர்களா? அவ்வாறு இருந்தால் உங்களுக்கு உதவி செய்ய உடன் பணிபுரிபவர்கள், உடன் பயில்பவர்கள், உற்றார்-உறவினர் ஓடி வருவர். நீங்களும் சமாதானத்துடன் இருக்கலாம். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது உலக வழக்கு! சகோதரர் ஒருமித்து வாழ்வது நன்மையும் இன்பமுமானது என்பது வேத வாக்கு! எல்லோருடனும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்வோம் நன்மையும், இன்பமும் பெற்றுக்கொள்வோம்.
- Bro. அருண் ஐயப்பன்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்திலுள்ள இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுதின்றி செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250