By Village Missionary Movement
Wednesday, 18-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 18-08-2021
உம்முடைய சித்தம்
“…உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.” - லூக்கா 22:42
ஒரு விவசாயிக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தனர். ஒருத்தியை ஒரு விவசாயிக்கும், மற்றவளை ஒரு குயவனுக்கும் திருமணம் செய்து வைத்தார். தன் இரண்டு பிள்ளைகளையும் அடிக்கடி போய் பார்த்து வருவது அவரது வழக்கம். அப்படி ஒருமுறை அவர் மூத்தவள் வீட்டிற்கு சென்றபோது அவள் தன் தகப்பனிடம், “அப்பா தேவன் நல்ல மழையை கொடுக்கும்படி அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள். பயிர்கள் மழை இல்லாமையினால் வாடிப்போய்க் கொண்டிருக்கின்றன” என்று கூறினாள். அவர் மற்ற பெண்ணை பார்க்க போனபோது அவள் தன் தகப்பனிடம், “அப்பா, நல்ல வெயில் அடிக்கும்படி ஜெபித்துக்கொள்ளுங்கள், அப்போது தான் என் கணவர் செய்த மண் பாத்திரங்கள் நன்றாய் காய முடியும்” என்று கேட்டுக் கொண்டாள். இப்போது தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு பேருக்காகவும் ஜெபிக்க வேண்டும்! ஆகவே கடைசியில் அவர் தைரியமாக தேவனே உம்முடைய சித்தம் எதுவோ அதுவே ஆகக்கடவது என்று ஜெபித்தார்.
இயேசுவானவர் 3 ½ ஆண்டுகள் வெற்றியாய் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினார். சிலுவையில் மரிப்பதற்கு முன்பாக ஒலிவமலைக்கு ஜெபிக்கும்படி சென்றார். பிதாவே உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.
எனக்கன்பானவர்களே! வானத்தையும், பூமியையும் உண்டாக்கினவர், சகல அதிகாரங்களையும் உடையவர், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கிறவர் இயேசுவானவர் ஒருவர் மட்டுமே. அப்பேற்பட்டதான தேவனே உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று பிதாவிடம் ஜெபம் பண்ணுகிறார். ஒருவேளை உங்களுக்கு தேவ சித்தம் இன்னதென்று தெரியவில்லையா? தேவசித்தத்தை அறிய முடியவில்லையா? குழப்பமடைய வேண்டாம். நம் தேவன் அனைத்தையும் அறிந்தவரல்லவா? நம் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களை அறிந்த தேவன், நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். எனவே நம்முடைய வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும், எல்லா காரியங்களிலும், எல்லா இடங்களிலும், உம்முடைய சித்தத்தின்படி நடத்தும் என ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம். அப்படியாக நாம் ஜெபிக்கத் தொடங்குவோமென்றால் அவரும் அவருக்கு சித்தமான காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து நம்மை நேர்த்தியாய் நடத்துவார்.
-Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகளை மாதந்தோறும் ரூ. 5000/- கொடுத்து தாங்குகிற குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250