By Village Missionary Movement
Wednesday, 11-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 11-08-2021
விருப்புக்கு விடுப்பு
“அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,” - எபிரெயர் 11:25
அநேக வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க தேசத்தை சேர்ந்த ஒருவர் சீன தேசத்தில் மிஷனெரி பணிசெய்து கொண்டிருந்தார். அவருக்கு சீன மொழி நன்கு தெரிந்திருந்ததால், பிரபலமிக்க எண்ணெய் கம்பெனி ஒன்று, தனது பிரதிநிதியாக அவரை நியமிக்க விரும்பினது. அந்த மிஷனெரியின் சம்பளத்தைவிட அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்கள். மிஷனெரி அந்த வேலையை ஏற்க மறுத்துவிட்டார். அவர் மறுப்பதற்கான காரணத்தைக் குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் நித்திய ஜீவனுக்காக ஆத்துமாக்களை சம்பாதிக்கிறேன். நரக அக்கினிக்குப் போகாமல் மக்களைக் காப்பாற்றுகிறேன். இந்த மேன்மையான வேலையை விட்டுவிட முடியாது” என்று பதிலளித்தார்.
மோசே அரண்மனையில் பார்வோன் குமாரத்தியின் மகனாக வளர்ந்த போது, இந்த உலக இன்பங்களை எவ்வளவு அநுபவித்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அப்.7:22ல், “...சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மோசே பெரியவனான போது எகிப்தில் கர்த்தருடைய பிள்ளைகள் அநுபவிக்கிற துன்பங்களைப் பார்க்கிறார். எகிப்திலுள்ள பொக்கிஷங்களை விட, தேவனுடைய பிள்ளைகளுடன் துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார். ஆகவே மோசே, அடிமைகளாக இருந்த கர்த்தருடைய சேனைகளை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே! மேலே பார்த்த இருவரும் தனிமனிதர்கள்தான்! ஆனால் கிறிஸ்துவின் அன்பு தங்கள் மூலமாக ஜனங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என தீர்மானித்து தங்களை அர்ப்பணித்தனர். அவரது அன்பின் கிரியை என்னவென்றால், மனிதனை அவன் விழுந்து விட்ட பாவ நிலையிலிருந்து தூக்கி எடுத்து பரலோக மகிமைக்கு உயர்த்துவதே! இந்த இரட்சிப்பின் வழியை ஜனங்களுக்கு அறிவிக்க நம்மை அர்ப்பணிப்போமா? மனம் திரும்பாதோரை குறித்த அக்கறை நம்மிடத்தில் உண்டா? நாம் நமது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே இன்னும் ஆர்வம் காண்பிப்பவர்களாய் இராமல், நம்பிக்கையின்றி தனிமையில், பயத்தில் அழிகின்ற அநேகர் தேவனுடைய அன்பின் திட்டத்தை அறிந்து கொள்ள, நமது நேரத்தையும், தாலந்தையும், நமக்குள்ள எல்லாவற்றையும் பயன்படுத்துவோமா? அநேகரை நீதிக்குட்படுத்தும்போது நட்சத்திரங்களைப் போல நாமும் பிரகாசிப்போம்! அல்லேலூயா!
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்திற்குள் வந்து தினமும் மதிய உணவு பெற்றுச் செல்லும் நபர்கள் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250