By Village Missionary Movement
Friday, 30-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 30-07-2021 (Bible Characters Special)
நற்சான்றிதழ்
“தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.” – 2 கொரிந்தியர் 10:18
வேதத்திலே ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் அநேகருடைய வாழ்க்கை முறைகளையும் அவர்களின் நடத்தைகளையும் காண்கிறோம். அதில் ஒரு சிலரைக் குறித்து தேவன் “நற்சான்றிதழ்” வழங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக தேவனிடம் முதன்முதலில் நற்சாட்சி பெற்ற பெயர் நோவா. அவரைக் குறித்து தேவன், “இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” என்று சர்டிபிகேட் கொடுத்தார். நோவா எப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வாழும்போது இந்த சாட்சியை பெற்றார் தெரியுமா? பூமியில் அக்கிரமம் பெருகியிருந்தது. மக்களின் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதவைகளாய் இருந்தன. அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வாழும் போதும் நோவா தன்னை நீதிமானாகக் காத்துக் கொண்டார்.
அதேபோல யாக்கோபு தன் முதிர்வயதிலே தன் குமாரர்களைக் குறித்து பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின்படி தீர்க்கதரிசனம் உரைத்தார். அப்போது யோசேப்பைக் குறித்து ஆவியானவர் “கனி தரும் செடி” என்று நற்சான்றிதழ் வழங்கினார். பாவத்திற்குட்பட்டு பட்டுப்போகாமல் கனி கொடுத்துக்கொண்டேயிருந்தார். ஆம், யோசேப்பு தனிமையிலே இருந்தபோதும், போத்திபாரின் மனைவியின் இச்சைக்கு உட்படாமல் தன்னை உத்தமனாகக் காத்துக் கொண்டார். “நான் தேவனுக்கு விரோதமாய் பாவஞ்செய்வது எப்படி?” என்றார். பாவம் செய்ய சூழ்நிலைகளும் சாதகமாயிருந்தும் தன்னை பரிசுத்தமாகக் காத்துக்கொண்ட யோசேப்பை தேவன் எகிப்திற்கு அதிபதியாக உயர்த்தினார்.
தேவப்பிள்ளைகளே! நம்மைக் குறித்து தேவன் இப்படிப்பட்ட நற்சான்று கொடுக்க முடியுமா? ஒரு வேளை மனிதர்கள் நம்முடைய வெளிப்புற நடவடிக்கைகளைக் கண்டு நம்மை நல்லவர்கள் என புகழலாம். ஆனால் தேவன் ஒருவர்தான் நம்முடைய இருதயத்தையும் அதின் உள்ளிந்திரியங்களையும் தெளிவாக அறிந்தவர். அவர் நம்மைக் குறித்து நற்சாட்சி வழங்க முடியுமா?
தேவனிடமிருந்து நற்சாட்சி பெற்ற நோவா, யோசேப்பு போன்றோர் பெற்ற சாட்சியை காத்துக்கொண்டனர். “என்னுடைய சக மாணவர்கள் தவறு செய்ததால்தான் நானும் அப்படிச் செய்தேன்” என்று கூறுவர் சராசரி மாணவர். ஆனால் சேற்றிலிருந்துதானே தாமரை மலர்கிறது. ஒரு துளி தண்ணீர் தன் மேல் பட்டாலும் உதறிவிடுகிறதல்லவா? அதுபோல இந்த பாவம் நிறைந்த சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், ஆவியானவரின் துணையினால் நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து தேவனிடம் நற்சாட்சி பெற இயலும். முயற்சிப்போமா!
- Mrs. மணிமொழி
ஜெபக்குறிப்பு:
12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250