By Village Missionary Movement
Thursday, 29-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 29-07-2021 (Bible Characters Special)
ஒநேசிமு
“முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்.” – பிலேமோன் 11
செய்த தவறுக்காக ஒருவன் போலீஸால் பிடிபட்டு ஜெயிலுக்கு செல்வது அந்த நபரின் வாழ்க்கையில் ஒரு பெரிய கரும்புள்ளியே! தண்டனை காலத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாலும் சமுதாயம் அவனை “ஜெயிலுக்கு போனவன்” என்ற கண்ணோட்டத்துடன்தான் பார்க்கும்.
இப்படி சிறைக்கு சென்ற ஒரு வாலிபன்தான் ஒநேசிமு. இந்த வாலிபனைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல், பிலேமோன் என்பவருக்கு எழுதின நிருபத்தை புதிய ஏற்பாட்டிலே 297ம் பக்கத்திலே வாசிக்கலாம். ஒநேசிமு, அந்நாட்களில் தன் எஜமானாகிய பிலேமோனுக்கு விரோதமாக செய்த ஒரு தவறினிமித்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால் அங்கே அவனுக்கொரு பெரிய திருப்புமுனை காத்திருந்தது. சுவிசேஷத்தினிமித்தம் அங்கே சிறையில் அப். பவுலும் இருந்தார். பவுலின் அன்பினாலும் ஜெபத்தினாலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டான். ஒநேசிமு விடுதலை பெறும் நாள் வந்தது. அவனை கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளும்படி, அவன் எஜமானாகிய பிலேமோனுக்கு பவுல் எழுதின அன்பின் நிருபமே பிலேமோன்.
அன்பானவர்களே! இச்செய்தியை வாசிக்கும் நீங்கள் வாழ்க்கையில் செய்த ஏதாவதொரு பெரிய தவறினிமித்தம் சமுதாயத்தாலும், குடும்பத்தாலும், நண்பர்களாலும் வெறுக்கப்பட்ட நபராயிருக்கலாம். ஒரு வேளை ஒநேசிமுவைப் போல ஜெயிலுக்கும் சென்று வந்திருக்கலாம். உங்களிடம் பேசவோ, உங்கள் மேல் அக்கறை காட்டவோ யாருமில்லாத நிலையில் இருக்கலாம். சமுதாயத்தில் ஒரு மதிப்பான வாழ்க்கை இனி நமக்கு கிடையாது என்ற நிலைக்கு கூட நீங்கள் வந்திருக்கலாம்.
உங்களுக்கு ஒரு நற்செய்தியை கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து நம்பும்போது அவர் உங்கள் இருண்ட வாழ்வை வெளிச்சமாய் மாற்றுவார். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். குற்ற உணர்வுகளிலிருந்து முழுமையான விடுதலையைப் பெற்றுக்கொள்வீர்கள். அது மட்டுமல்லாது, மனிதர் கண்களில் தயவு என்னும் ஒரு ஆசீர்வாதத்தையும் தருவார். நீங்கள் எதிர்பாராத மனிதர்கள் தேடி வந்து உங்களை அன்பாய் ஏற்றுக் கொள்வதை நீங்கள் பார்க்க முடியும். கிறிஸ்தவ விசுவாசிகளுள்ள ஐக்கியமாகிய சர்ச்சுக்கு நீங்கள் போகும்போது, உங்களது கடந்த கால வாழ்வு தெரிந்தும், உங்களை உண்மையாய் நேசித்து உங்கள் மேல் கரிசனை கொள்ளும் ஒரு கூட்ட மக்களை காண்பீர்கள். மேலேயுள்ள வசனத்திலுள்ளது போல முன்பு யாருக்கும் பிரயோஜனமில்லாத ஒநேசிமு, பின் அனைவருக்கும் பிரயோஜனமுள்ளவனாய் மாறினது போல உங்களுடைய வாழ்க்கையும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறும்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
அனைத்து மாநிலங்களிலும் இருந்து 12 மிஷனெரிகளை தேவன் அழைத்து வர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250