By Village Missionary Movement
Tuesday, 27-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 27-07-2021 (Bible Characters Special)
பாவியான ஸ்திரீ
“...இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே...” – லூக்கா 7:47
இவள் ஒரு பாவியான ஸ்திரீ. இவள் இருந்த ஊரிலே ஒரு பரிசேயனுடைய வீட்டிற்கு இயேசுகிறிஸ்து விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து துரிதமாய் அங்கு சென்றாள். பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அவராலே மெய்சமாதானம் உண்டாகும் என்ற உண்மையையும் அறிந்திருந்தாள். எனவே இரட்சிப்பையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள தகுந்த ஆயத்தத்தோடு விருந்து வீட்டுக்குச் சென்றாள். யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் அவள் கவலைப்படவில்லை. யாருக்கும் பயப்படவுமில்லை, வெட்கப்படவுமில்லை. கைகளில் பரிமளத்தைலத்தோடு வீட்டிற்குள் சென்று அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து அத்தைலத்தைப் பூசினாள். இயேசு தன்னுடைய திரளான பாவங்களை மன்னிக்கிறவர் என்பதை அவள் அறிந்திருந்ததினால் எந்தெந்த விதங்களிலெல்லாம் தன் அன்பை வெளிப்படுத்த முடியுமோ அத்தனை விதங்களிலும் வெளிப்படுத்தினாள். இயேசுவே அவளுடைய அன்பை புகழுகிறார் என்றால் பாருங்களேன்!
இயேசு நம்மையும் அவ்விதம் புகழும் அளவுக்கு அவரிடம் அன்புகூருகிறோமா? நம்முடைய திரளான பாவங்களை இயேசு எவ்வளவு அன்புடன் மன்னித்திருக்கிறார் என்ற ஆழமான உணர்வு அப்பெண்ணைப் போல நமக்கும் இருந்தால்தான் நாம் இயேசுவிடம் மிகுந்த அன்புகூரமுடியும். அப்படி அன்புகூரும்போது நம் பயம், வெட்கம் எல்லாவற்றையும் மறந்து இயேசுவுக்கு சேவை செய்து அவரே உலக இரட்சகர், சமாதான பிரபு என்று நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களுக்கு வெளிப்படுத்த முடியும்.
பாவங்கள் மன்னிக்கப்பட்ட அந்த ஸ்திரீ இன்று நம்மைப் பார்த்தால் என்ன சொல்லுவார்? “உங்கள் தேசத்தில் கோடானுகோடிப்பேர் இயேசுவே பாவ விமோசனம் செய்து மோட்ச வாழ்வு கொடுப்பவர் என்பதை அறியாமல் புண்ணிய நதிகளில் நீராடி தங்கள் பாவங்களை போக்க எண்ணுகிறார்களே! பலி செலுத்தி புண்ணிய ஸ்தலத்திற்கு யாத்திரை சென்று, விரதமிருந்து தங்கள் சரீரத்தை வருத்திக் கொள்ளுகிறார்களே! இன்னும் சிலர் விபச்சாரம், வேசித்தனம், குடிபோதை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களையே கெடுத்துக்கொள்கிறார்களே! எத்தனையோபேர் சமாதானத்தை இழந்து தற்கொலையை நோக்கி ஓடுகிறார்களே? இதே சூழ்நிலையிலிருந்த நான் “இயேசுவே இரட்சகர்” என்பதை அறிந்திருந்ததினால் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டேன். ஆனால் உங்களை சுற்றியிருக்கிற மக்களுக்கு நீங்கள்தானே அறிமுகப்படுத்தவேண்டும். பாவத்தின் வேதனையை நான் அறிந்ததால் அங்கலாய்க்கிறேன். நீங்கள் என்னைப் போன்றவர்களை துரிதமாய் சந்திப்பீர்களா?”
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடாரத்தின் ஒலி மற்றும் ஒளி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250