By Village Missionary Movement
Saturday, 24-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 23-07-2021 (Bible Characters Special)
கானானியப் பெண்
“...நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்...” – மத்தேயு 21:22
இயேசுகிறிஸ்து தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்கு வந்தபோது, அந்த திசைகளில் வசித்து வந்த ஒரு கானானிய பெண் இயேசுவிடம் வந்து, பிசாசினால் கொடிய வேதனை அனுபவித்து வந்த தன் மகளுக்காக வேண்டுதல் செய்தாள். முதலில் இயேசு பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில் அவள் யூதரல்லாத புறஜாதி! அதிலும் சபிக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவள். காரணம், “கானான் சபிக்கப்பட்டவன்” (ஆதி. 9:25) என்று வேதம் கூறுகிறதல்லவா? அந்த சந்ததியிலிருந்து வந்தாலும் இவளோ ஆண்டவரை விடுவதாயில்லை. அவள் திரும்பவும் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டபோது, இயேசு “பிள்ளைகளின் (இஸ்ரவேலர்) அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு (புறஜாதியார்) போடுவது நல்லதல்ல” என்றார். நாய்க்கு நம்மை ஒப்பிட்டுவிட்டாரே என அவள் பின்வாங்கவில்லை. “மெய்தான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே” என்றாள். அவள் தன்னை தரைமட்டும் தாழ்த்தினாள். இறுதியில் கிருபையை பெற்றுக்கொண்டாள். அதுமாத்திரமல்ல ஆண்டவரை பின்தொடர்ந்து கூப்பிட்டு தன் மகளுக்கு விடுதலை கிடைக்கும்வரை அவரை விட்டு விலகவில்லை. அவளது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனது விசுவாசத்தைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார். அந்நேரமே அவள் மகள் சுகமானாள். நம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபிக்கும் காரியத்திலே இந்த கானானிய பெண் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி.
ஆம், நாமும் நமது பிள்ளைகள் பாவத்திலிருந்து, வியாதியிலிருந்து, தீயபழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று வாஞ்சிக்கிறோம். பிரச்சனை தலைக்கு மேல் வந்துவிட்டால் ஆண்டவரை நோக்கி மன்றாடி ஜெபிக்கிறோம். பிரச்சனையின் தீவிரம் குறைந்தவுடன் ஜெபத்தின் தீவிரத்தையும் குறைத்துவிடுகிறோம். ஆனால் இந்த கானானிய ஸ்திரீயோ இயேசுவே அற்புதம் செய்ய விரும்பாத சூழ்நிலையிலும், அவரிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையிலும், நாய்களைப் போல தான் தள்ளப்பட்டவள் என அறிந்தபோதிலும் அவள் ஆண்டவரை விடவில்லை. தன்னை ஆண்டவருக்கு முன் தாழ்த்தினாள், விடாப்பிடியாய் பின்சென்றாள், விசுவாசித்தாள். இவை அனைத்தும் சேர்ந்து அற்புதத்தைப் பெற்றுத்தந்தது.
இன்று நாமும் ஒரு தீர்மானத்தை எடுப்போம். என் பிள்ளைகளின் விடுதலைக்காக, எதிர்பார்க்கிற நன்மையான காரியம் கைகூடி வர, ஆசீர்வாதத்திற்கான தடைகள் மாற்றப்பட நான் விடாப்பிடியாய் விசுவாசித்து ஜெபிக்கப்போகிறேன். நிச்சயம் அற்புதத்தைப் பெற்றே தீருவேன். அதன்மூலம் தேவனை மகிமைப்படுத்தப்போகிறேன் என்று தீர்மானியுங்கள். கர்த்தர் உங்கள் விசுவாசத்தை கனப்படுத்துவாராக.
- Bro. டேவிட் தவமணி
ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடார பணிகளில் உள்ள தொய்வு மாறி விரைவாக கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250