By Village Missionary Movement
Thursday, 22-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 22-07-2021 (Bible Characters Special)
யோபு
“...யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்;...” – யாக்கோபு 5:11
“உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” என்று கர்த்தரால் அடுக்கடுக்காய் பாராட்டப்பட்ட ஒரே வேதாகம மனிதர் யோபு. இவர் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து நீதிமானாய் திகழ்ந்தார். நீதிமான் என்றால் தேவனுக்கு முன்பாக சரியாய் வாழ்பவன்தானே! தன் குடும்பத்தாரிடம் சிறு தவறுகள் காணப்பட்டாலும் உடனே தேவனிடம் ஒப்புரவாகும் நிலைப்பாடுடையவர். தேவனை தொழுதுகொள்வதிலும், பாவமன்னிப்பை நாடுவதிலும் தவறாதவர். இச்சூழ்நிலையில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே நடைபெற்ற சம்பாஷணைகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்குள் தான் இருப்பதையும் யோபு அறியவில்லை. ஒரே நாளில் தன் அருமையான 10 பிள்ளைகளையும், திரளான ஆஸ்திகளையும் இழந்தபோதிலும் கர்த்தரை அவர் இழக்க விரும்பவில்லை. அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று உறுதிபட கூறுகிறார். தனக்கு ஏற்பட்ட துன்பங்களை பொறுமையாக சகித்தார். “எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தன்னை நேசிக்கிற நீதிமான்கள் உண்டு” என்ற உண்மையை நிலைநிறுத்துவதற்காக தேவன் யோபுவை தெரிந்துகொண்டார்.
மனைவியின் பரிகாச சொற்களையும், நண்பர்களின் குற்றச்சாட்டுகளையும் சகித்துக்கொண்டு என்ன ஆனாலும் தேவனை பின்பற்றுவேன் என்று உறுதியுடன் காணப்பட்டார். அந்த சிநேகிதர்களுக்காகவும் ஜெபம் செய்து அதினிமித்தம் கர்த்தரின் கிருபையையும் பெற்றுக்கொண்டார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரண்டாம் வருகையைப் பற்றியும், உயிர்த்தெழுதலைப் பற்றியும் வெளிப்பாட்டை பெற்றார். இறுதியில் சாத்தானின் எண்ணத்தை பொய்யாக்கினார். சாத்தான் தோற்றுப்போனான்.
எனக்கருமையானவர்களே! நமது துயரங்கள் துன்பங்கள் வழியாக தேவன் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறார் என்பது உண்மைதான். ஆனால் பாடங்களை கற்றுக்கொள்வதற்காக மட்டுமே துன்பங்களை அனுப்புகிறார் எனவும் கூற இயலாது. இதை யோபுவின் வாழ்விலிருந்து அறிந்துகொள்கிறோம். ஆகவே நமது வியாதி, துன்பம், துயரம், உபத்திரவம் என அனைத்திற்கும் “காரணத்தை” அறிந்து கொள்ள முயற்சிக்காமல் பொறுமையாக இருப்போம். மறைவானவை தேவனுக்குரியவை! ஒருவேளை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்து செல்லும்போது உங்களை இழிவாக பேசின உறவினர், நண்பர்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்க பிரயாசப்படுங்கள். நீங்கள் இழந்த சுகம், சமாதானம், சந்தோஷம் என அனைத்து நன்மைகளையும் தேவன் இரட்டிப்பாய்க் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பார்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
இந்த Lock down நாட்களில் VMM ஊழியர்களின் அத்தியாவசியத் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250