By Village Missionary Movement
Tuesday, 20-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 20-07-2021 (Bible Characters Special)
யெகூ
“...நிம்சியின் குமாரனாகிய யெகூ….(இரதத்தை) அதிவேகமாய் ஓட்டுகிறான்...” - 2 இரா. 9:20
தேவன் தம்முடைய இருதயத்தின் வைராக்கியத்தை நிறைவேற்ற சில குறிப்பிட்ட மனிதர்களை தம்முடைய தைலக்குப்பியினால் அபிஷேகித்து அவர்களை விசேஷப்படுத்தி தம்முடைய சித்தத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுகிறார். அந்த வரிசையிலே யெகூவை தேவன் ஆகாபின் குடும்பத்தை அழிக்கும்படி தெரிந்துகொள்கிறார். யெகூவைக் கொண்டு தேவன் ஆகாபை அழிக்க வேண்டிய காரணம் என்ன?..... எலிசா தீர்க்கதரிசியின் நாட்களிலிருந்த ஆகாப் ராஜா நாபோத்தின் திராட்சை தோட்டத்தை எடுத்துக்கொண்டதினிமித்தம் தீர்க்கன் ஆகாப் வீட்டார் மேல் சாபமிட்டார். அப்போது யெகூ யோராம் ராஜாவுக்குக் கீழ் ஒரு சேனாதிபதியாக இருந்தார்.
தேவன் ஆகாப் வீட்டாரின் இரத்தப்பழியை அவர் மனைவியாகிய யேசபேலின் கையிலே வாங்கும்படி யெகூவை தெரிந்துகொண்டார். யெகூ கர்த்தர் மேல் வைத்த வைராக்கியத்தினால் தனக்குக் கொடுக்கப்பட்ட காரியத்தை துரிதமாய் செய்து முடித்தார். யேசபேலையும், ஆகாபின் முழு குடும்பத்தையும் அழிக்க இரதத்தை “அதிவேகமாய் ஓட்டினான்” என்று வேதம் சொல்லுகிறது. நாமும் யெகூவைப் போல கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற பணியை துரிதமாய் நிறைவேற்ற நம்முடைய ஆவிக்குரிய இரதத்தை அதிவேகமாய் ஓட்டுவோம்.
ஏராளமான வேசித்தனங்களையும் பில்லி சூனியங்களையும் கொண்டிருந்த யேசபேலின் சிங்காரத்தில் தான் சிக்கிக்கொள்ளாமல் கர்த்தரின் கட்டளையின்படியே, யேசபேலை வயல்வெளியின் மேல் போடும் எருவைப் போல் ஆக்கினான். சாகப்போகிறோம் என அறிந்தும் மேக்கப் போட்ட யேசபேலைப் போல் உலகத்திற்குள் ஊறிப்போனவர்களாக நாம் இருக்கவேண்டாம். (2இரா.9:30) ஆம், யெகூ உலக மயக்கத்திற்கு ஆண்டவருடைய வைராக்கியத்தை விற்றுப்போடாமல் தேவனுடைய காரியத்தை தீவிரமாய் நிறைவேற்றினார்.
பிரியமானவர்களே! அன்று சவுலிடம் ஆண்டவர் அமலேக்கியரின் சகல வஸ்துக்களையும் அழித்துப்போடு என்றபோது சவுல் கீழ்ப்படியாமல் முதல் தரமானதை விட்டு வைத்தது தேவனை கோபமூட்டியது. ஆனால் யெகூ-வோ தேவன் அழிக்க கட்டளையிட்டதை அதிவேகமாய் செய்து முடித்தார். நாம் சவுலைப் போலல்ல, யெகூவைப் போல கர்த்தரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிவோம். அலுவலகத்திலோ, தனிப்பட்ட வாழ்விலோ தேவன் விட்டுவிட வேண்டுமென்று உணர்த்துகிறதை தீவிரமாய் செய்து முடிப்போம். தேவன் இதையே நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை T.V. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் புறஜாதி மக்களும் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250