By Village Missionary Movement
Monday, 19-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 19-07-2021 (Bible Characters Special)
நாகமான்
“...ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” – நீதி. 12:15
அன்றாட வாழ்வில் நம்மில் அநேகருக்கு நம்மைவிட சிறிய நபர்கள் அதாவது வயதிலோ அனுபவத்திலோ சிறியவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யும்படி கூறினால் அதை ஏற்றுக்கொள்வது சிலருக்கு சற்று சிரமமாக இருக்கும்; பலருக்கு அதிக சிரமமாயிருக்கும். தேவன் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் நபர்களோடு இணைந்தே அவருடைய காரியங்களை நிறைவேற்றும்படி திட்டமிட்டுள்ளார். ஆகவே பிறரது உதவிகளை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இல்லையெனில் அவர்கள் மூலமாய் தேவன் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை இழந்துபோக வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் சிறியவர்களும் நமக்கு உதவ முடியும். சிறியவர்களுடைய உதவியைப் பெறுவது தரம் தாழ்ந்த நிலையைக் காட்டுவதாக உலகம் நினைக்கிறது. ஆனால் நாம் உலகத்திற்குரியவர்களல்ல; உலகத்தை ஜெயித்தவர்கள்.
சீரிய ராஜாவின் படைத்தலைவனாக நாகமான் வீட்டிலே இஸ்ரவேலிலிருந்து அடிமையாய் வந்த ஒரு சிறுபெண் இருந்தாள். மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். இதை அறிந்த சிறுபெண், “நம் எஜமான் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும். அவர் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” என்று ஆலோசனை கூறுகிறாள். சிறுபெண்ணின் வார்த்தையைக் கேட்டு ராஜாவினிடத்தில் கடிதம் பெற்றுப் புறப்பட்டுச் செல்கிறாள். ஆனால் எலிசாவோ தன் வேலைக்காரனை அனுப்பி யோர்தானில் ஏழுதரம் மூழ்கும்படி சொல்லி அனுப்புகிறான். நாகமானோ ஒரு நாட்டின் இராணுவத்தலைவன், ராஜாவுக்குப் பிரியமானவன், வெகுதொலைவிலிருந்து வேறு வந்திருக்கிறான். ஆனால் சந்திக்க வேண்டிய நபரை சந்திக்கவில்லை. வீட்டு வேலைக்காரனையே சந்திக்க முடிந்தது. இந்த சூழ்நிலையை சற்று நம் மனக்கண் முன் கொண்டுவருவோம். தனது அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றால் எலிசா வந்து தொட்டு ஜெபித்து சுகமாக்குவார் என்று நினைத்தான். ஆனால் வந்ததோ வேலைக்காரன். செய்யவேண்டியது யோர்தானில் ஏழுதரம் மூழ்கி ஸ்நானம் செய்யும் சாதாரண காரியம். மிகவும் கோபமடைந்தவனாய் திரும்பிவிட நினைக்கிறான். அப்பொழுது உடனிருந்த ஊழியக்காரன் பொறுமையுடனும் தைரியத்துடனும் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யும்படி சொன்னால் கட்டாயம் செய்வீரல்லவா? என்று கூறின வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படிந்து நாகமான் யோர்தானில் ஏழு தரம் மூழ்குகிறான். குஷ்டரோகம் நீங்கி சுகமடைந்தவனாய் திரும்பிச்சென்றான்.
இதை வாசிக்கிற அன்பான சகோதரனே, சகோதரியே உங்களுக்கு உதவி செய்யும்படி உங்கள் குடும்பத்தில், தெருவில், சபையில், நண்பர்கள் வட்டாரத்தில் அநேகரைத் தேவன் கொடுத்திருக்கிறார். அவர்களுடைய ஆலோசனையைக் கேட்கிறோமா அல்லது நாகமான் எலிசாவே நேரில் வந்து காரியம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்ததுபோல, தேவனே பேசவேண்டும், தேவனே எனக்கு சொல்லவேண்டும் என்று எண்ணி மற்றவர்களின் வார்த்தைகளை, ஆலோசனைகளை அசட்டை செய்கிறோமா? சிறுபெண் அதிலும் அடிமைப்பெண், தனக்குக் கீழுள்ள ஊழியக்காரன் இவ்விருவருடைய வார்த்தைகளைக் கேட்டான், கீழ்ப்படிந்தான், அற்புதத்தைப் பெற்றுக்கொண்டான். இன்றும் நம் முன் சாட்சியாக நிற்கிறான். நமக்கும் கர்த்தருக்குள்ளான ஆலோசனைகள் அநேகம் வந்துகொண்டேயிருக்கிறது. கேட்டு கீழ்ப்படிந்தால் அற்புதம்... இல்லாவிட்டால்...! முடிவு நம் கையில்!
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
நாம் கிராமங்களில் சந்தித்து வழிநடத்தின சிறுவர்கள், வாலிபர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250