By Village Missionary Movement
Friday, 16-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 16-07-2021 (Bible Characters Special)
ஒபதியா
“...ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.” -1இரா. 18:3
ஒபதியா – இவரின் பெயருக்குரிய அர்த்தம் “கர்த்தரின் ஊழியன்” என்பதாகும். இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாபின் அரண்மனையிலே அரண்மனை விசாரிப்புக்காரன் என்கிற உயர்ந்த பொறுப்பில் காணப்பட்டார். “ஊரோடு ஒத்துவாழ்” என்கிற வழக்கச்சொல் உண்டு. ஆனால் ஒபதியா இதற்கு எதிரிடையாக காணப்பட்டார். “கர்த்தருக்கு மிகவும் பயந்து நடந்தான்” என வேதாகமத்தில் ஒரு சிலரைப்பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஒபதியாவும் ஒருவர். அவரைப் பற்றி இன்று பார்க்கலாம்.
இஸ்ரவேல் மக்களை விக்கிரக ஆராதனையில் வழிநடத்தியதில் பெரும்பங்கு ஆகாப் இராஜாவிற்கு உண்டு. தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே ஆகாப் பொல்லாங்காய் நடந்தான் என வாசிக்கிறோம். ஜனங்களை விக்கிரக ஆராதனையில் வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல் கர்த்தரின் ஊழியர்களை தேடித்தேடி கொலை செய்தார்கள் என வாசிக்கிறோம். இப்படி ஒரு நெருக்கமான காலத்தில் ஒபதியா கர்த்தருடைய ஊழியர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் நூறு பேரை சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு அப்பமும், தண்ணீரும் கொடுத்து பராமரித்து வந்தார். இப்படி கர்த்தருடைய ஊழியர்களை பாதுகாத்து பராமரிப்பதினால் தனக்கு வரும் அபாயத்தைக் குறித்து சிறிதேனும் கவலைப்படவில்லை. யேசபேலுக்குத் தெரிந்தால் தன்னை உயிருடன் விட்டுவிட மாட்டாள் என்பதையும் அறிந்திருந்தார். எல்லோரையும்போல நானும் ஆகாபோடும், யேசபேலோடும் சேர்ந்து செயல்படுவேன் என துன்மார்க்கமாய் வாழவில்லை. மாறாக தேவனை நேசிப்பதிலும் தேவனுடைய ஊழியர்களை பாதுகாத்து பராமரிப்பதிலும் ஒபதியா மிகுந்த கவனமுடையவராயிருந்தார். ஒபதியாவிடம் காணப்பட்ட இவ்வித சீரிய பண்புகள் ஏதோ திடீரென ஒருநாளில் வரமாக கிடைத்துவிடவில்லை. சிறுவயது முதற்கொண்டு ஒபதியா கர்த்தருக்கு பயந்து நடந்தார் என பரி. வேதம் அவரைப் பற்றிக் கூறுகிறது. (1இரா. 18:12)
இன்றைய தியானச்செய்தியில் ஆவியானவர் உங்களுடன் பேசுகிறார். இதை வாசிக்கின்ற உங்களில் வயதில் சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என யாராக இருந்தாலும் சரி, உங்கள் முன் வைக்கப்படும் கேள்வி இதுவே. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்னிடத்தில் உள்ளதா என உங்களையே கேட்டுப்பாருங்கள். தேவனைக் குறித்த அறிவும், பயமும் அற்ற உலகிலே வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மை அவருக்குப் பிரியமாய் வாழும்படி தேவன் அழைக்கிறார். மனுஷர்களில் சிலரை பிரியப்படுத்துவதற்காக பரலோக தேவனை துக்கப்படுத்திவிட வேண்டாம். இதெல்லாம் ஒரு தப்பா என்று சின்ன சின்ன விஷயங்களில் காணப்படும் அசட்டுத்தனம், தேவனுக்குப் பயப்படும் பயம் என்கிற வழியிலிருந்து நம்மை விலகிப்போகச் செய்யும். கவனமாயிருப்போமாக!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
பிசாசினால், வியாதியினால் கட்டப்பட்ட மக்களுக்கு Healing Service நடத்தப்பட, இதன் மூலம் அநேகர் அற்புத விடுதலை பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250