By Village Missionary Movement
Wednesday, 14-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 14-07-2021 (Bible Characters Special)
யெப்தாவின் குமாரத்தி
“தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை... தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16
யெப்தா என்றாலே நமது நினைவுக்கு வருவது பொருத்தனை. நியாயாதிபதிகள் 11ஆம் அதிகாரத்தை வாசிக்கும்போது யெப்தாவைக் குறித்ததான காரியங்களை அறிந்து கொள்கிறோம். அவர் ஒரு பராக்கிரமசாலியான மனுஷர். ஆனால் அவருடைய சொந்த ஜனங்களே அவரை, “நீ தேவையில்லை, ஓடிப்போ” என்று துரத்தி விடுகிறார்கள். துரத்தின மனிதர்களே திரும்பவுமாக யெப்தாவை தேடி வந்து, அவரைத் தங்களுக்கு தலைவனாக நியமிக்கவும் ஒப்புக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யெப்தா அம்மோன் புத்திரருக்கு விரோதமாய் யுத்தத்திற்காக செல்லும்போது கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணிவிட்டு கடந்து செல்கிறார். “நான் சமாதானத்தோடு திரும்பி வருகையில் என் வீட்டு வாசற்படியில் எதிர்கொண்டு வருவது எதுவோ அதை கர்த்தருக்கு பலி செலுத்துவேன்” என்பதே பொருத்தனை.
யுத்தத்தில் கர்த்தர் தந்த ஜெயத்தோடு கூட யெப்தா தன் வீட்டிற்கு வருகிறபோது அவருடைய ஒரே குமாரத்தி தம்புரு வாசித்து, நடனஞ்செய்து தன் தகப்பனாருக்கு எதிர்கொண்டு வருகிறாள். யெப்தாவின் குமாரத்தி – ஒரு வாலிபப்பெண். தன் தகப்பனாருக்கு ஒரே பிள்ளையானவள். அவளைக் கண்ட யெப்தா கர்த்தரிடத்தில் தான் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தவராய் கதறுகிறார். ஆனால் அவருடைய குமாரத்தியோ எந்தவித கலக்கமோ, படபடப்போ இல்லாதவளாய் தன் தகப்பனார் கர்த்தரிடத்தில் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவதற்காக தன்னையே சர்வாங்க தகனபலியாய் கர்த்தருக்கு அர்ப்பணிக்க முன்வருகிறாள். தான் மிகவும் அன்பு வைத்திருந்த தன் தகப்பனாரின் சமாதானத்திற்காக, கர்த்தருக்குச் செய்த பொருத்தனையை நிறைவேற்றுவதற்காக துணிந்து தன்னையே பலியாய் ஒப்புக்கொடுக்கிறாள்.
பிரியமானவர்களே! இவ்வுலகில் நாம் நேசிக்கிற, அன்பு வைத்திருக்கிற மனிதர்களுக்காக எதையாவது செய்துவிட வேண்டும் என்று ஆதங்கமுள்ளவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறரும் நமக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையவர்களாய் இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதர்களாகிய நம்முடைய மீட்பிற்காக தன்னையே சிலுவையில் பலியாக அர்ப்பணித்த கிறிஸ்துவின் அன்பு எத்தனை மேலானது! இன்றும் நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிற கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு ஆழமானது! அவர் நம்மேல் வைத்த அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சிலுவையின் மேலான அன்பை உணர்ந்தவர்களாய், அனுதினமும் பிறருக்கு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிற சாட்சிகளாய், நடமாடும் நிருபங்களாய் இவ்வுலகில் வாழ நம்மையே ஜீவபலியாய் கர்த்தரிடம் அர்ப்பணிப்போம்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாலிபர்களுக்கென சிறப்பு முகாம்களை நடத்த தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250