By Village Missionary Movement
Sunday, 11-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 11-07-2021 (Kids Special)
மூன்று சிலுவைகள்
“...மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்....” – லூக்கா 15:7
குட்டிப்பிள்ளைகளா, இன்றைக்கு நாம எல்லோரும் எருசலேம் பட்டணத்திற்கு வெளியேயுள்ள கொல்கொதா என்ற மலையில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்பதற்காக 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லப் போகிறோம். ரெடியா?
அந்த மலையில் மூன்று சிலுவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலுவையிலும் ஒவ்வொருவர் அறையப்பட்டிருந்தனர். நடுவில் இருக்கும் சிலுவைதான் உங்களையும் என்னையும் இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தொங்கின சிலுவை. அவருக்கு இரண்டு பக்கமும் இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் இயேசுவைப் பார்த்துச் சத்தம் போட்டு அவரைக் கேலியும் செய்தான். “நீர் கடவுளானால் சிலுவையிலிருந்து இறங்கி வாரும். எங்களையும் இத்தண்டனையிலிருந்து காப்பாற்றும்” என்றான். இயேசுவோ எதுவும் பேசாமல் அமைதியாய், கைகளிலும் கால்களிலுமுள்ள காயங்களின் வேதனையை சகித்துக்கொண்டிருந்தார்.
ஆனால் பாரு, இன்னொரு கள்ளன் கேலி செய்தவனைப் பார்த்து, “உனக்கு கடவுள் பயமே இல்லையா? நாம் இருவரும் தப்பு செய்ததால் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் இவரோ தவறு செய்யாமலேயே தண்டிக்கப்படுகிறார். அவரை கேலி செய்வதை நிறுத்து” என்று கோபத்தோடு கூறினான். சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் இயேசுவின் பக்கமாய் திரும்பி, கண்ணீர் நிறைந்த கண்களோடு, “ஆண்டவரே நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது என்னை நினைத்தருளும்” என்றான். இயேசப்பாவிற்கு இவனை ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. நல்லா கவனித்துக்கேளும்மா! இயேசு கிறிஸ்து நிறைய அற்புதங்களை செய்தபோது, அதாவது வியாதியை சுகப்படுத்தி, மரித்தவர்களை எழுப்பினபோது கூட சிலர் அவரை விசுவாசிக்கவில்லை. ஆனால் இங்கே மிக மோசமான குற்றவாளியான இந்த கள்ளன் இயேசு மிக பலவீனமான மனிதனாகத் தொங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் மேல் நம்பிக்கை வைத்தான். சூப்பர் அல்லவா? இயேசு அவனை இன்றைக்கு நீ என்னோடு கூட பரதீசில் இருப்பாய் என்றார். ஆம், அவன் தன் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டவனாக வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் மனந்திரும்பி பரலோகத்திற்கு செல்லும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டான்.
குட்டீஸ், இந்த உலகத்தில் நிறையப்பேர் இயேசப்பாவை ஆசீர்வாதத்திற்காக, தேவைக்காக, பிரச்சனை தீருவதற்காக, வியாதி மாற தேடுறாங்க. ஆனால் அந்த கள்ளன் இவை எதையும் கேட்கல, அவன் கேட்டது இரட்சிப்பு மட்டுமே! நீயும் உலக ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரை தேடாமல், உன் வாழ்வில் இயேசு நிறைந்திருக்கும்படியாக உன் பாவத்தை மன்னிக்கும்படியாக அவரை தேடுவாயானால் விலைமதிப்பற்ற பரலோக வாழ்வுக்கு சொந்தக்காரனாகிவிடுவாய், என்ன Ok வா.
- Mrs. அனிதா அழகர்சாமி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250