By Village Missionary Movement
Saturday, 10-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 10-07-2021 (Bible Characters Special)
அன்னாள்
“...நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.” - 1சாமுவேல் 1:15
அன்னாள், பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு சாதாரண குடும்ப பெண்ணாயினும் அவளது ஜெபம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இஸ்ரவேலில் ஒரு தாயாக விளங்கிய அன்னாளின் வாழ்விலிருந்து நாம் பின்பற்றக்கூடிய குணநலன்கள் பல உண்டு. அதிலும் குறிப்பாக அவளிடம் காணப்பட்ட “அமைதலுள்ள ஆவி” அழியாத அலங்கரிப்பாய் அவள் இருதயத்தில் மறைந்து காணப்பட்டது. அது தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
அன்னாளின் வாழ்விலே குழந்தையில்லாத குறைவிருந்தது. அதனால் அவள் வேதனைக்குட்பட்டாள். வருஷந்தோறும் கர்த்தருடைய ஆலயத்திற்கு செல்லும்போதெல்லாம் பெனின்னாள் அவளை மனமடிவாக்கினாள். இதனால் பல ஆண்டுகளாய் அன்னாள் அழுதாள், நிந்தையை அனுபவித்தாள், வேதனைப்பட்டாள், நொறுக்கப்பட்டாள். ஆனாலும் ஒரு காரியத்தைக் கவனியுங்கள். அவள் எந்த இடத்திலும் பெனின்னாளுக்கு பதிலுக்குப் பதில் பேசியதாகவோ, “கணவரின் அன்புக்குரியவள் நான்தான்” என்றோ எதுவும் கூறவில்லை. அமைதி காத்தாள். பெனின்னாளைப் பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. மாறாக அவள் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே மறுமொழியாயிற்று. பெனின்னாளிடம் மாத்திரமல்ல, ஏலியிடமும் அப்படியே நடந்துகொண்டாள். ஆலயத்திலே மிகுந்த மனவேதனையோடு ஜெபித்து முடித்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்த அன்னாளிடம், ஏலி, “நீ குடித்து வெறித்திருக்கிறாயா?” என்று கேட்கிறார். ஆனாலும் அவள் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தோடு எந்த பதிலையும் கொட்டிவிடாமல், “அப்படியல்ல என் ஆண்டவனே” என்று கூறுகிறாள். வாழ்வின் கடினமான நாட்களிலும் அவள் தனது நல்ல சுபாவத்தை இழந்துவிடவில்லை. ஆம், குடும்பத்தில் அன்னாளை சிறப்பிக்கச்செய்தது இப்படிப்பட்ட சுபாவமே! இதனிமித்தம் கணவனின் அன்பும், பரிவும், கரிசனையும் அதிகரித்தது. மாம்சத்தின்படி அவள் பதில் கிரியைகளை செய்யாததினால் அவள் ஆவிக்குரிய பெண்மணியானாள். அவள் அமைதியாக இருந்தாள்; பரலோகம் அவளுக்காக முழங்கியது. ஆம், சாமுவேல் பிறந்தான். இப்போது தன் வாயைத் திறந்து தேவனைத் துதிக்கிறாள்.
பிரியமானவர்களே! குடும்பத்தில், வேலை ஸ்தானத்தில், சபையில் உங்களது மாம்சீக எண்ணத்தின்படி பேசத் துணியாமல் அமைதியாயிருந்து ஆவிக்குரியவர்களாய் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அமைதியாய் இருந்தால், பரலோகமே உங்களுக்காக முழங்கும் என்பதை மறந்துபோகாதீர்கள். அமைதி காப்பது ஏதோ கோழைத்தனம் என்று எண்ணவேண்டாம். தேவனின் பார்வையில் சாந்தமும் அமைதலும் விலையேறப்பெற்ற அலங்காரமல்லவா? அன்னாளின் கதையை நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறோம். இன்று அன்னாளிடமிருந்து நாமும் அமைதலை கற்றுக்கொள்ளுவோம்.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்திற்குள் வந்து தினமும் மதிய உணவு பெற்றுச் செல்லும் நபர்கள் இயேசுவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250