By Village Missionary Movement
Friday, 09-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 09-07-2021 (Bible Characters Special)
நகோமி
“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” – யாக்கோபு 1:14
நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்த நாட்களிலே இஸ்ரவேல் தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்போது அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலிருந்து, எலிமெலேக்கு தனது மனைவி நகோமியையும் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு மோவாப் தேசத்திற்கு சென்று அங்கே குடியிருந்தார்கள். அந்நாட்களில் எலிமெலேக்கு மரித்தார். பின்பு தங்கள் மகன்களுக்கு அத்தேசத்திலேயே பெண் கொண்டார் நகோமி. அந்த இரு மருமகள்கள் மேலும் நகோமி அளவுகடந்த பாசம் வைத்திருந்தாள். சில ஆண்டுகளில் இருமகன்களும் மரித்துப்போயினர். நகோமி தனிமரமானாள். இப்போது யோசிக்கிறாள், ஆண் துணையின்றி தனியாய் அந்நிய தேசத்தில் வாழ்வதைவிட நம் தேசத்திற்கு செல்வதே நல்லது என்று முடிவெடுத்து புறப்படுகிறாள். தாமதமாக எடுத்த முடிவானாலும் 10 ஆண்டுகள் எடுக்காத ஒரு நல்ல முடிவையே எடுத்திருக்கிறாள். தன் இரு மருமகள்களையும் வாழ்த்தி முத்தமிட்டு அவர்களை தாய்வீட்டிற்கு அனுப்புகிறாள். ஆனால் அவர்களோ போகமாட்டோம் என்று அழுகின்றனர். மருமகள்களின் இருதயத்தில் மாமி எவ்வளவாய் இடம் பிடித்திருக்கிறாள் பாருங்கள்! மிகுந்த வற்புறுத்தலினால் ஒருத்தி சென்றாலும் ரூத் நகோமியை விட்டு பிரியாமல் பெத்லெகேம் செல்கிறாள்.
பெத்லெகேம் சென்ற நகோமி, இனி தன்னை நகோமி (இனிமையான மகள்) என்று அழைக்காமல் மாராள் (கசப்பு) என்று அழையுங்கள், சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார் என்று தனது இந்த நிலைக்கு தேவனே காரணம் என்று கூறுகிறாள். ஆண்டவர் மேல் 4 குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாள். ஆண்டவர் எனக்கு கசப்பை கட்டளையிட்டார், என்னை வெறுமையாய் திரும்பப் பண்ணினார், என்னை சிறுமைப்படுத்தினார், என்னை கிலேசப்படுத்தினார் என்று கூறினாள். ஆனால் இவற்றிற்கெல்லாம் காரணம் நகோமியே அன்றி ஆண்டவரல்ல. பஞ்சம் என்று குடிபெயர்ந்தவர்கள் பஞ்சம் மாறினதும் திரும்பியிருக்கலாம். கணவன் இறந்தபோதும் இந்த எண்ணம் வரவில்லை. அந்த அந்நிய தேசத்தில் ஆண்டவரை அறியாத பெண்களை மகன்களுக்கு மனைவியாக்குகிறாள். இப்படி தன் விருப்பப்படியே அனைத்தையும் செய்தாலும் ஆண்டவரோ அவர்கள் மேல் இரக்கமுள்ளவராயிருந்தார்.
இப்படித்தான் இன்றும் அநேகர் தங்கள் வாழ்க்கையில் சுயசித்தத்தின்படி தவறான முடிவுகளை எடுத்துவிட்டு அதன் முடிவுகள் பாதகமாய் இருக்கும்போது ஆண்டவர் என்னை சோதிக்கிறார் என்று கூறுவார்கள். அவனவன் தன்தன் சுய இச்சையினால் இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான் என்று வேதம் சொல்லுகிறதல்லவா? ஆனாலும் நம் தேவன் இரக்கமுள்ளவராய் திக்கற்றவர்களுக்கும் விதவைகளுக்கும் நியாயம் செய்கிறவர். ரூத்திற்கு தன் உறவின் முறையான போவாஸை திருமணம் செய்து விதவை திருமணத்தை ஆதரித்த முதல் பெண்ணாகிறாள் நகோமி. இவர்களுக்கு பிறந்த ஓபேத்தின் சந்ததியில்தான் இயேசு கிறிஸ்து பிறக்கிறார். ஆ என்ன அற்புதம்! மத்தேயு 1ல் உள்ள இயேசுவின் வம்சவரலாறு பட்டியலிலே இந்த மோவாபிய பெண் ரூத் இடம்பிடித்துவிட்டாள். நகோமியின் கசப்பான வாழ்வு மாற்றப்பட்டது. ஆம், நம் சுய விருப்பப்படி எங்கிருந்தாலும் மீண்டும் ஆண்டவரின் பாதுகாப்பு எல்லைக்குள் வரும்போது நம் வாழ்வு மதுரமாகிறது. அல்லேலூயா!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரி மனைவி நிரோஷாவுக்கு தேவன் தந்த நல்ல பெண் குழந்தைக்காக துதியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250