By Village Missionary Movement
Wednesday, 07-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 07-07-2021 (Bible Characters Special)
காலேப்
“...நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்...” – எண்ணாகமம் 13:30
கானான் தேசம் – இஸ்ரவேலருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பாலும் தேனும் ஓடும் நல்ல தேசம். அந்த தேசத்தை வேவுபார்க்க மோசே 12 கோத்திர பிரபுக்களை அனுப்புகிறார். அவர்களில் 10 பேர் திரும்பி வந்து “அவர்கள் இராட்சதர்கள், நாமோ வெட்டுக்கிளிகளைப் போலிருக்கிறோம்” என்று துர்ச்செய்தியைப் பரப்பினார்கள். இந்த 10 பேரும் தங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பயந்திருந்தார்கள். ஆனால் யோசுவாவும், காலேபும் தங்களையல்ல, தங்களுக்குள் இருக்கும் தேவனோடு அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, “கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நாம் பயப்படவேண்டியதில்லை, எளிதாய் சுதந்தரித்துக்கொள்ளலாம்” என்றனர். இவ்விசுவாச வீரர்களில் ஒருவரான காலேபை பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்துகொள்வோமா?
காலேப்பை குறித்து வேதம் மீண்டும் மீண்டும் கொடுக்கும் சிறந்த சாட்சி, “அவர் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினார்” என்பதே! ஆம், அவர் கர்த்தரை உத்தமமாய் பின்பற்றியதே தேவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உருவாக காரணமாயிற்று. இஸ்ரவேலர் அனைவருமே ஆண்டவரின் அற்புதமான வழிநடத்துதலின் கீழ் இருந்தவர்கள்தான். ஆனாலும் பெரும்பான்மையானோருக்கு இல்லாத விசுவாசம் இவருக்கு வர காரணம் என்ன? ஆண்டவரோடுள்ள உத்தம உறவும், உத்தம இருதயமுமே தேவனுடைய வல்லமையை சரியாய் அறிந்துகொள்ளக் கூடிய வெளிச்சத்தை அவருக்குக் கொடுத்தது. “தேவன் கானானை நமக்குத் தருவேன் என்று சொல்லிவிட்டார். பின் செய்யாமல் இருப்பாரோ? இஸ்ரவேலின் தேவனுக்கு கடினமானதெதுவும் உண்டோ?” என்று கர்த்தர் சொன்னதை அப்படியே நம்புகிற எளிய ஆனால் ஆணித்தரமான விசுவாசமுள்ளவராய் இருந்தார். 85 வயதில் 40 வயதில் இருந்த பெலனைப் பெற்றிருந்தார். மோசேயிடம் மலைநாட்டைத் தாரும் என்று கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
அன்பானவர்களே! நம் இந்திய தேசத்தை நிச்சயமாய் சுதந்தரித்துக்கொள்வோம் என்ற விசுவாசம் நமக்கு உண்டா? அல்லது ஆட்சியையும் ஆட்சியாளர்களையும், சட்டங்களையும், எதிர்ப்பாளர்களையும் கண்டு இவர்கள் நம்மிலும் பலவான்கள். நாமோ சிறுபான்மையினர், வெட்டுக்கிளிகளைப் போல இருக்கிறோம் என்று எண்ணுகிறீர்களா? நாம் ஒவ்வொரு நாளும் உத்தம இருதயத்தோடு ஆண்டவரை பின்பற்றுகிறவர்களாயிருப்போமானால் நிச்சயமாய் காலேபிற்குள் இருந்த அந்த அசைக்க முடியாத வைராக்கியமும் விசுவாசமும் நமக்குள்ளும் இருக்கும். தேவன் யார் என்றும் அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை என்பதைக் குறித்த தெளிவான அறிவு நமக்கு “எளிதாய் ஜெயித்துவிடலாம்” என்ற நம்பிக்கையை நமக்குத் தரும். ஆம், சூழ்நிலைகளை அல்ல, சுற்றியுள்ள மனிதர்களையுமல்ல, நமக்குள் இருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனையே நோக்கிப் பார்ப்போம். மிக எளிதாய் நம் தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கிக் கொள்வோம். பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
- Bro. டேவிட் தவமணி
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப்பணிகளில் தேவக்கரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250