By Village Missionary Movement
Tuesday, 06-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 06-07-2021 (Bible Characters Special)
யோகெபேத்
“...நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு...” - யாத். 2:9
கொடிய பஞ்சம் கானானில் ஏற்பட்ட காலத்தில் உயிர் வாழ்வதற்காக யோசேப்பினால் எகிப்துக்குக் கொண்டுவரப்பட்ட யாக்கோபின் குடும்பத்தாரில் லேவியும் ஒருவன். லேவிக்கு முதிர்வயதில் பிறந்த மகள்தான் யோகெபேத். யோகெபேத் என்றால், “யெகோவாவின் மகிமை” என்று பொருள். இவரது கணவர் அம்ராம். இத்தம்பதியினருக்குப் பிறந்த குழந்தைகள்தான் ஆரோன், மிரியாம், மோசே (யாத். 6:20). மூன்றாவது குழந்தை யோகெபேத்தின் வயிற்றிலிருக்கும்போதுதான், எகிப்தின் ராஜா பிறக்கும் ஆண்குழந்தைகளையெல்லாம் உடனே கொல்ல வேண்டும் என்று ஆணையிட்டான். இக்கொடூரமான சூழ்நிலையில் மற்றுமொரு குழந்தையா? நமக்குத்தான் ஆண் ஒன்று பெண் ஒன்று இருக்கிறதே, போனால் போகட்டும் என்று எளிதாக நினைக்கவில்லை. மோசேயை மூன்று மாதம் ஒளித்து வைத்து அப்புறம் ஒளித்து வைக்க முடியாத காரணத்தால், ஆண்டவரை விசுவாசித்து முதலைகள் நிறைந்த நைல் நதியில் ஒரு நாணல் பெட்டியில் வைத்து அனுப்பினாள். ஆம், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விசுவாசம், பயத்தை புறம்பே தள்ளும் விசுவாசம், கீழ்ப்படியும் விசுவாசம் யோகெபேத்திடம் காணப்பட்டது.
பார்வோனின் குமாரத்தியின் மூலம் சம்பளத்தோடு மீண்டும் மோசேயை வளர்க்கும் வாய்ப்பு கிட்டியது. விசுவாசித்தவளை தேவன் விட்டுவிடுவாரோ? பிள்ளைகள் தேவன் நமக்கு கொடுத்த பரிசு அல்லவா? அவர்களுக்கு பணத்தை செலவழிப்பதை காட்டிலும் முக்கியமாய் நேரத்தை செலவழிக்கவேண்டும். அவள் தன் மகனுக்கு பாலூட்டி வளர்த்தாளா என்பதை விட ஜீவனுள்ள தேவனுடைய அறிவை புகட்டியிருப்பாள். எனவேதான் மோசே அரண்மனை ஆடம்பரத்தைக் காட்டிலும், ஆண்டவருடைய சித்தத்தை தெரிந்துகொள்வதிலும், பாவசந்தோஷத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், பாடு அனுபவிப்பதையும் தெரிந்து கொண்டார். வேதத்தின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதிய மோசேக்கு தேவ ஞானம் எங்கிருந்து வந்திருக்கும்?
ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளை உருவாக்கும் சிற்பி. “அன்னையின் மடி குழந்தையின் சிறந்த கல்விக்கூடம்” அன்பு பெற்றோரே! உங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறீர்கள்? யோகெபேத்தை போல நம்முடைய பிள்ளைகளுக்கு வேத அறிவைப் புகட்டுகிறோமா? யோகெபேத்தின் பிள்ளை வளர்ப்பை பாருங்கள், மிரியாம் ஒரு சிறந்த பாடகி, தீர்க்கதரிசி, ஆராதனை வீராங்கனை. ஆரோன் இஸ்ரவேலரின் முதல் பிரதான ஆசாரியன். மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து கானானுக்குள் வழிநடத்திய சாந்தமுள்ள தலைவன். எதிரியாகிய பார்வோனின் கையில் அடிமைப்பட்டிருந்த தேவ ஜனத்தை விடுவிக்க தேவனுக்கு ஒரு மோசே தேவைப்பட்டார். நித்திய நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிற ஆத்துமாக்களை தப்புவிக்க தேவன் பயன்படுத்தும் பிள்ளையாக உங்கள் பிள்ளை இருக்கலாமே; யாருக்குத் தெரியும்? விசுவாசமுள்ள ஒரு தாயாக நம் கரத்தில் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை வளர்க்க கர்த்தர் தாமே நமக்கு கிருபையருள்வாராக!
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
குடிபோதைக்கு அடிமையாகி உள்ள மக்கள் விடுதலை பெற ஆரம்பிக்கப்பட்டுள்ள Peace Centre -க்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250