By Village Missionary Movement
Monday, 05-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 05-07-2021 (Bible Characters Special)
ஈசாக்கு
“ஈசாக்கு ரெபேக்காளை... நேசித்தான்.” – ஆதியாகமம் 24:67
நமது முற்பிதாவான ஆபிரகாம் – சாராள் தம்பதியினருக்கு முதிர்வயதில் பிறந்த மகன் ஈசாக்கு. இவரது திருமணத்திற்கு முன்பே தாய் சாராள் மரித்து விட்டாள். 40 வயதில் திருமணம் முடித்து மனைவி ரெபேக்காளை மிகவும் நேசித்தார். இவர்களின் குடும்ப வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களையும், விட்டுவிட வேண்டிய காரியங்களையும் சற்று திரும்பிப் பார்ப்போமா?
கற்றுக்கொள்ள வேண்டியவை: ஈசாக்கு ஒரு ஜெபிக்கிற மனிதனாக இருந்தார். திருமணத்திற்கு முன் ஒரு வாலிபனாக இருந்த நாட்களில் சாயங்காலவேளையிலே தியானம் பண்ண வெளியே போயிருந்தார் (ஆதி.24:63) அனுதினமும் அவருடைய ஜெபவாழ்வு வளர்ந்து பெருகினது. இவர்களுக்கு 20 வருடம் குழந்தையில்லை. ஆனாலும் மனைவியை குறை கூறவில்லை, பிறரிடம் தங்கள் குடும்ப குறைவைப் பற்றி பேசவுமில்லை, மாறாக மலடியாயிருந்த தன் மனைவிக்காக கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தார் (ஆதி. 25:21) கர்த்தர் ஜெபத்தைக் கேட்டார். ஆம், நம் குடும்பவாழ்விலும் கணவன்-மனைவிக்கிடையே நண்பர்களோ, உறவினர்களோ, உங்கள் பெற்றோரோ கூட நுழைந்து விடக்கூடாது. தேவனிடம் மாத்திரமே அதை தெரிவிக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் மனைவியை, கணவனை திருமணம் முடித்த நாளிலிருந்தது போல இந்நாள்வரை நேசிக்கிறோம். மனைவிக்கு குழந்தையில்லாமலிருக்கலாம், பெலவீனமாயிருக்கலாம் அல்லது கணவனுக்கு நிரந்தர வேலையில்லாமலிருக்கலாம் ஆனாலும் ஆண்டவர் கொடுத்த வாழ்க்கைத் துணையை உள்ளான அன்போடு நேசிக்கிறோமா என சிந்திப்போம். மேலும் ஈசாக்கு மனைவியோடு நேரம் செலவழித்தான். இந்நாட்களில் நமது நேரத்தை விழுங்க பல காரியங்கள் காத்திருக்கின்றன. T.V., செல்போன், நியூஸ்பேப்பர் இவற்றில் மூழ்கி விடுகிற கணவன்மார்கள் உண்டு. உங்கள் சரீரத்தின் பாதியாகிய வாழ்க்கைத் துணையோடு நேரம் செலவிடுங்கள். அதுவே குடும்பம் என்னும் கட்டிடத்தை தாங்கி பிடிக்கும் தூணைப் போன்றது.
விட்டு விட வேண்டிய காரியம்: இத்தம்பதியினர் பிள்ளை வளர்ப்பிலே பட்சபாதத்தோடு நடந்து கொண்டனர். ஏசா அப்பா பிள்ளை, யாக்கோபு அம்மா பிள்ளை என அவர்களுக்குள்ளாகவே அறியப்பட்டுக் கொண்டனர். இதினிமித்தம் குடும்பத்தில் பெரிய பிரிவினை ஏற்பட்டது. நாம் நம் பிள்ளைகள் அனைவரையும் ஒன்று போல நேசிப்போம். 5 விரல்கள் ஒன்றாயிராதது போல பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருப்பது இயல்பு. ஆனாலும் அவர்களை சமமாய் நேசித்து, ஆசீர்வாதங்களை சரிசமமாய் பகிர்ந்து கொடுப்பதே நம் குடும்பத்திற்கு ஆசீர்வாதம்!
நம் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட, அன்பு நிரம்பிவழிய ஆண்டவர் அருள்புரிவாராக.
- Mrs. அகதா சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையாலும் தாங்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250