By Village Missionary Movement
Saturday, 03-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 03-07-2021 (Bible Characters Special)
நோவா
“...நோவா... விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.” -எபிரெயர் 11:7
சிருஷ்டிப்பின் நாட்களிலே தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கி நல்லது, நல்லது என்று கண்டார். ஆனால் பூமியிலே மனுஷர் பெருகத் துவங்கி அக்கிரமமும் பெருகியதால் மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். ஆகவே எல்லாவற்றையும் அழிக்க தீர்மானம் பண்ணினார். ஆனாலும் அத்திரள் கூட்டத்திலே நீதிமானும் உத்தமனுமாயிருந்த நோவாவை கர்த்தருடைய கண்கள் கண்டது. உலகத்திற்கு No (நோ) என்றும் தேவனுக்கு Ok (வா) என்றும் நோவா வாழ்ந்ததினால்தான் அல்லவோ? உலகம் புரட்சியை கொண்டுவருவதற்கு திரள் கூட்டத்தை நம்பும். ஆனால் தேவனோ தனி நபரையே எதிர்பார்க்கிறார். அந்த தனிநபராய் நின்றார் நோவா. இந்த நாளிலும் நோவாவைக் குறித்து ஒரு சில காரியங்களை தியானிப்போம்.
கிருபை பெற்ற நோவா: பெரும்திரள் கூட்ட மக்கள் அழிவுக்கு நியமிக்கப்பட்டிருக்க, நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. தகுதியில்லாத ஒருவருக்கு தேவன் பாராட்டும் தயைதான் கிருபை. தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் காட்டும் தயையை நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா? உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உங்களுக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களை விட அதிக வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகத்தில் இருக்கும் 175 கோடி மக்களைவிட நீங்கள் மேலானவர்கள். நோயின்றி காலையில் புத்துணர்வுடன் எழும்ப வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிரை விட்ட பலரை விட நீங்கள் பாக்கியவான்கள். தாகம் இருந்தால் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கிறதா? அப்படியெனில் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்குள் நீங்கள் மேலானவர்கள். இன்னும் இப்படி பல கிருபைகளை தேவன் ஒவ்வொரு நாளும் நமக்கு தந்து வருகிறார். இத்தனை கிருபைகளைப் பெற்ற நாம் அதைப் போக்கடிக்கிறவர்களாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா என சிந்திப்போம். நோவாவோ பெற்ற கிருபைக்கு பாத்திரவானாய் நடந்துகொண்டார்.
கீழ்ப்படிந்த நோவா: கிருபை பெற்றதோடு மட்டுமல்ல ஆண்டவரின் கட்டளை அனைத்திற்கும் கீழ்ப்படிந்தவராகவும் நோவா வாழ்ந்தார். எபி. 11:7ல் நோவா விசுவாசத்தினாலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்பைப் பெற்று குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டாக்கினார் என்று பார்க்கிறோம். மழையையே பார்த்திராத காலத்தில் வாழ்ந்த நோவா, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றினார். நம் வாழ்வில் தேவ வார்த்தைக்கு 99% கீழ்ப்படிந்து 1% கீழ்ப்படியாமல் இருப்பது கீழ்ப்படியாமைக்குத்தான் சமம். 100% கீழ்ப்படிதலே கீழ்ப்படிதல். நண்பர்கள், உற்றார், உறவினர்கள் வார்த்தைகளின் ஏளனமான பேச்சுக்கு இணங்காமல் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார் நோவா. நோவாவின் வாழ்வில் இருந்த கீழ்ப்படிதல் நமக்கும் அவசியமல்லவா? கீழ்ப்படிந்து தேவ சித்தத்தை இப்பூமியில் நிறைவேற்றுவோம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரி பிள்ளைகளின் கல்விக் கட்டணம் செலுத்தப்பட தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250