By Village Missionary Movement
Friday, 05-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 05.06.2026
இலவசமான மீட்பு
“இலவசமாய்.. கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” - ரோமர் 3:24
உலகத்தில் பல காரியங்களை நாம் இலவசமாகவே தேவனிடமிருந்து பெறுகிறோம். ஆனால் அவற்றிற்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா? ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். நாம் சுவாசிக்க நல்ல காற்றை, குடிக்க நல்ல தண்ணீரை, உண்ணப் பலவிதமான இயற்கை உணவுகளை, உடுத்த நல்ல உடைக்காக பருத்தியையும், பட்டு இழைகளையும் தந்திருக்கிறார். இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களையும், பல வகை தாது உப்புகளையும் நம் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் கொடுத்திருக்கிறார். வெளிச்சத்திற்காக சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையும், நாம் வசிக்க பூமியையும் படைத்துள்ளார். இவையெல்லாவற்றிற்கும் நம் தேவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். இவற்றிற்கு நாம் கிரயம் செலுத்தத் தேவையில்லை. எல்லாவற்றையும் இலவசமாய் அனுபவிப்பதால், அவற்றின் உண்மையான மதிப்பு நமக்குத் தெரிவதில்லை.
அதுபோலவே இயேசு கிறிஸ்து இலவசமாய் நமக்கு மீட்பைக் கொடுத்து, நீதிமான்களாக்கியும் இருக்கிறார். இவ்வுலகத்தில் பாவம் செய்து கெட்டுப்போன நமக்கு தேவனைத் தேடுகிற உணர்வு இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம். அந்த மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் நம்மை விடுவிப்பது யார்? அதற்காகவே இயேசு இந்த மண்ணுலகுக்கு விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து, நம்மெல்லாருடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பல பாடுகளை ஏற்று மரித்தார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, விண்ணுலகில் பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வளவு பாடுபட்டு சம்பாதித்த மீட்பை நம் ஒவ்வொருவருக்கும் இலவசமாய் கொடுத்திருக்கிறார். ஆனால் நம்முடைய சரீரமும், ஆத்துமாவும் கெட்டுப்போகிறதற்கு எதுவாக நமது செயல்பாடுகள் இருக்கிறது. அநேகர் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, பணத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல் தங்கள் சரீரத்தைக் கெடுத்துவிடுகின்றனர். வாலிபர்கள் மற்றும் பெரியோர்கள் கூட சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழித்து தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். சாதிக்க வேண்டிய பருவத்தில் இருக்கும் இளைஞர்கள் பலர் இப்படிப்பட்டதான பாவங்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்கையையும் எதிர்காலத்தையும் இழந்து விடுகிறார்கள். இவற்றிலிருந்து விடுபட்டு, இயேசுவின் இலவச மீட்பைப் பெற்றுக்கொள்ள ஓடி வாருங்கள். இதைத்தான் ஏசாயா 55:1,2 ல் “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றி, திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்” என்று தேவன் கூறியிருக்கிறார்.
அருமையான வாலிபப் பிள்ளைகளே, சகோதரர்களே, சகோதரிகளே, பணமுமின்றி, விலையுமின்றி, உங்கள் இரட்சிப்பையும் மீட்பையும் இலவசமாய் இயேசுவிடமிருந்து பெற்று, உங்கள் சரீரத்தையும் ஆத்துமாவையும் காத்துக் கொள்ளுங்கள்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:-
12 Kids Club ல் உள்ள பிள்ளைகள் கர்த்தரின் அன்பை அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864