By Village Missionary Movement
Friday, 08-May-2026இன்றைய தியானம்(Tamil) 08.05.2026
சிநேகிக்கின்ற சிநேகிதன்
"சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்;.." - நீதி.17:17
நாம் பெற்ற ஆசீர்வாதங்களில் நம் உறவுகளும், சிநேகிதர்களும் அடங்குவர். உறவுகள் மனித வாழ்க்கையின் வேர்களாகவும், உணர்வுகளைப் பகிரும் பாலமாகவும் திகழ்கின்றன. உண்மையான நண்பர்கள் எல்லாக் காலத்திலும் அதாவது கஷ்டமானாலும், நஷ்டமானாலும் நம்முடன் நிற்பார்கள். கடினமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கும் போது, தேவபக்தியுள்ள நண்பர்கள் நமக்கு இருப்பார்களானால் நமக்காக ஜெபித்து, வேத வசனத்தை கொண்டு நமக்கு ஆலோசனை வழங்குவார்கள். இப்படிப்பட்ட நட்பு கர்த்தரின் ஆசீர்வாதமே.
வேதாகமத்தில் தாவீது, யோனத்தானின் நட்பு உண்மையான நட்பிற்கு ஒரு சிறந்த உதாரணம். 1 சாமுவேல் 18 : 1 இவ்வாறு கூறுகிறது, “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான்.” யோனத்தான் தாவீதோடு போட்டியிடவில்லை. தேவனுடைய சித்தத்தை ஏற்றுக் கொண்டு தன் சால்வையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூட தாவீதுக்குக் கொடுத்தான். இது தியாகமான, சுயநலமற்ற நட்பு. யோவான் 15 :13 ல் “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” இயேசு சிலுவையில் தம் ஜீவனை அர்ப்பணித்து தமது அன்பை நிரூபித்தார். “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” என்று பிலிப்பியர் 4: 19 ல் எழுதப்பட்டுள்ளது. அவர் நம் பலவீனத்தில் பலனையும், கலக்கத்தில் சமாதானத்தையும், பாவத்திலிருந்து மன்னிப்பையும் அளிக்கிறார்.
ஆனால் மனிதர்கள் நமக்கு உதவி செய்வது ஒரு வரம்பு வரை மட்டுமே. சில நேரங்களில் சூழ்நிலையினிமித்தம் அவர்கள் நமக்கு உதவ முடியாமல் கூட போகலாம். இன்றைய உலகில் அனைத்து செல்வமும் நமக்கு இருப்பினும் உண்மையான அமைதி மற்றும் சந்தோஷம் நம்மில் காணப்படுகிறதா? பணம் மனிதனின் முக்கிய தேவையாக இருந்தாலும் தேவ சமாதானம், தேவனோடு கூட நமக்குள்ள உறவு என்பது அதைவிட முக்கியம் என்பதே உண்மை. இயேசுவே நம் மிகச் சிறந்த நண்பர். நண்பர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே நம்முடன் வரலாம். ஆனால் இயேசு ஒருபோதும் நம்மை விட்டு நீங்க மாட்டார், நம்மைக் கைவிடவே மாட்டார். சங்கீதக்காரனான தாவீது கூறுகையில் என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார் என்கிறார். அவரை உங்கள் நெருங்கிய நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்குள் உண்மையான சமாதானமும், நிலையான ஆனந்தமும் உண்டு. வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் கர்த்தராகிய இயேசுவை நம்பி அவருடன் நடவுங்கள். அவரே சமாதானத்தினால் நம்மை நிரப்பி ஆளுகை செய்வாராக. ஆமென்.
- Bro. மனோஜ் பிரான்சிஸ்
ஜெபக்குறிப்பு:-
VBS பாடத்திட்டத்தை தேவன் ஆசீர்வதித்து அதன் மூலம் அநேக பிள்ளைகள் தொடப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864