By Village Missionary Movement
Thursday, 07-May-2026இன்றைய தியானம்(Tamil) 07.05.2026
கையேந்த விடாத தகப்பன்
“...நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை” - சங்கீதம் 37:25
கடந்த மாதம் விழுப்புரத்தில் ஒரு சிறுவர் முகாமை ஆயத்தப்படுத்தி நல்ல முறையில் நடத்த தேவன் கிருபை பாராட்டினார். அம்முகாமிற்கு வரும் சிறுபிள்ளைகளுக்கு கொடுக்க பரிசுப் பொருட்கள் வாங்கவேண்டியிருந்தது. அதற்கான பணத்தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஊக்கமாக ஜெபித்துக்கொண்டே இருந்தோம். முகாம் நடத்த இரண்டு நாட்களே இருந்தபடியால் எங்களுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. காரணம் பரிசுப் பொருட்கள் வாங்க பணம் இல்லையே என்ற கவலை. யாருமே தெரியாத ஒரு இடத்தில் வந்து ஊழியம் செய்கின்றோம் என்று மனதில் ஒரு கலக்கம். உடனே என் மனதில் ஒரு வார்த்தை தோன்றியது. யாருமே தெரியாத இடத்தில் நீ ஊழியம் செய்வது உண்மைதான். ஆனால் எல்லோரையும் உண்டாக்கிய சர்வ வல்லவராகிய இயேசு உன்னுடன் இருக்கிறார் என்பதை மறந்து விடாதே என்று தேவன் என்னிடம் பேசினார். அடுத்த நொடி என் உள்ளம் சந்தோஷத்தினால் நிறைந்தது. நான் கண்ணீரோடு சொன்னேன் இயேசப்பா, என் கூட இருக்கீங்கல்ல.. ம்ம்ம்... என்று ஜெபத்தை முடித்து விட்டு, காலை மிக உற்சாகமாய் ஊழியத்திற்கு புறப்பட்டேன். மதியம் தொலைபேசியில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் நடத்த இருக்கும் சிறுவர் முகாமிற்கு Gifts வாங்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டு, அந்த பணத்தை எங்களிடம் கொடுத்து விட்டார். நாங்களும் அதை வைத்து Gifts வாங்கி வந்தோம். சிறுவர் முகாமை தேவன் கிருபையாய் ஆசீர்வதித்து தந்தார்.அப். பேதுரு இப்படியாக எழுதுகிறார்; “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்”. அப். பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில், நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினால் தேவனுக்கு தெரியப்படுத்தும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும் என்கிறார். எனவே நம் தேவைகளை தேவனிடத்தில் தெரிவித்துவிட்டு விசுவாசத்தில் உறுதியாய் இருப்போம்.
எனக்கு அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்களும் ஊழியத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்வில் யாருமே இல்லை என்று புலம்பி அழுதுக்கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். வேதம் சொல்லுகிறது மனிதனால் கூடாதது தேவனால் கூடும் என்று. ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் நம் அருகில் நின்றுகொண்டு நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கவலைகள் எல்லாவற்றையும் இயேசப்பா மாற்றுவார். தேவனையே சார்ந்து நாம் செயல்படும்போது தேவன் கைவிடுவாரோ? ஒரு போதும் கைவிடமாட்டார். கருவில் உன்னைத் தெரிந்துகொண்ட தேவன் உன்னை தெருவில் விடமாட்டார்.
- Bro. எபிநேசர்
ஜெபக்குறிப்பு:-
VBS பாடல்களை பாடும் போதே கர்த்தரின் அன்பு பிள்ளைகள் மேல் ஊற்றப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864