By Village Missionary Movement
Tuesday, 05-May-2026இன்றைய தியானம்(Tamil) 05.05.2026
இரக்கம் செய்வாயாக
“…சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் (காயப்பட்டவனை) கண்டு, மனதுருகி” - லூக்கா 10:33
புகழ்பெற்ற வடஇந்திய மிஷனெரி சாது சுந்தர் சிங், தூர இடங்களுக்கெல்லாம் அலைந்து திரிந்து இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்கும் பழக்கமுடையவராயிருந்தார். பல வேளைகளில் அவர் இந்திய எல்லையை கடந்து பனிபடர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் வழியே திபெத் செல்வார். ஒரு முறை இவ்விதமாக பனிக்கட்டிகள் மூடிய கடினமான பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பயணி ஒருவர் இளைப்படைந்து மயங்கி பனியில் விழுந்து கிடப்பதைக் கண்டார். அவருக்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தவர் சாகக் கிடப்பவனைக் கண்டும் காணாதவர் போல் அவனை கடந்து போய் விட்டார்.
சாதுவோ அவனைக் கண்டு மனதுருகினார். அந்த மனிதனைக் கூடுமானவரை போர்த்தி, தன் தோளில் போட்டுக் கொண்டு அடுத்த ஊருக்கு கொண்டு போய் சேர்த்தார். பரிதாபம் என்னவென்றால், தனக்கு முன்பாக நடந்து சென்றவன் குளிரில் விறைத்து வழியருகே செத்து கிடந்ததை கண்டார். இரகசியம் என்ன? அவன் தனியாயிருந்தபடியால் குளிரை தாங்கமுடியாமல் செத்துப் போனான். சாது சுந்தர் சிங் ஒரு மனிதனை தூக்கிச் சென்றதால் ஒருவரது சரீரத்திலிருந்த சூடு மற்றொருவருடைய சரீரத்திற்கு பரவியதால் இருவருமே உயிர் பிழைத்தார்கள்.
வேதம் சொல்கிறது “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்”. சாது ஒருவனுக்கு இரக்கம் பாராட்டி தூக்கி சென்றபடியால் அவரும், அவர் தூக்கி சென்றவனும் பிழைத்தார்கள். முன்பாக சென்றவன் தான் பிழைத்தால் போதும், நாம் ஏன் அவனுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தனித்து போனபடியால் குளிர் தாங்காமல் மரித்துப் போனான்.
எனக்கருமையான தேவபிள்ளைகளே, இதை தான் இயேசுகிறிஸ்து, நல்ல சமாரியன் கதை மூலமாக நமக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார். ஆசாரியன், லேவியனுக்கு கிடைக்காத இரக்கம் நல்ல சமாரியனுக்கு கிடைத்தது. ஏன்? அந்த மனுஷன் உதவி தேவைப்பட்டவனாக காணப்பட்டான். அந்த உதவியை முதல் இரண்டுபேரும் செய்யவில்லை. அதை சமாரியனே செய்தான். ஆதலால் அவனுக்கே இரக்கம் கிடைக்கும் என்றார். பவுல் சொல்கிறார் “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (கலா.6:9). ஆமென்! கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு :-
VBS ஊழியத்திற்கு எல்லா கிராமங்களிலும் திறந்த வாசலைத் தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864