By Village Missionary Movement
Saturday, 02-May-2026இன்றைய தியானம்(Tamil) 02.05.2026
தலையாட்டி பொம்மை
“...நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” - யாக்கோபு 1:22
சிறு பிள்ளைகள் விளையாடும் தலையாட்டி பொம்மையை எப்படி ஆட்டி விட்டாலும் தலையாட்டும். அதே போல் சிலர் என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டே கேட்பார்கள். அந்த பொம்மை எப்படி அதை அசைத்தவுடன் தலையாட்டி விட்டு, பின்பு அதே நிலைக்கு வந்து விடுவது போல, சிலரும் கேட்பது போல கேட்டு விட்டு செயல்படாமல் இருப்பார்கள். 1 சாமு.17 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் இராணுவத்தின் முன்பு பெலிஸ்திய வீரனான கோலியாத் வந்து 40 நாட்களாய் இஸ்ரவேலின் இராணுவத்தை, ஏன் தேவனையே நிந்தித்துப் பேசினான். ஆனால் இஸ்ரவேல் இராணுவமோ, ராஜாவோ கோலியாத்தை எதிர்க்காமல் 40 நாளளவும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். இராணுவ பயிற்சி காலங்களில் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் தலையாட்டிக் கேட்டுவிட்டு, அதனை போர்க்களத்தில் எதிரியான போர் வீரனிடம் காட்டாமல், அமைதியாக இருக்கின்றனர். பயிற்சி காலத்திலும் எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டனர், எதிரி நாட்டு போர் வீரன் பேசும் நிந்தைப் பேச்சையும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர், செயல்படவில்லை.
தாவீது தான் ஆடு மேய்த்த போது எதிர்த்து வந்த சிங்கம், கரடியை வீழ்த்த தேவன் கற்றுத் தந்த பயிற்சியை கற்றுக் கொண்டார். அதே போல் சத்துருவான கோலியாத்தின் நிந்தை பேச்சை கேட்டும், கற்ற பயிற்சியை சவுலிடம் சொல்லி வைராக்கியமாய் கர்த்தரின் துணை கொண்டு செயல்படுகிறார், ஜெயத்தை சுதந்தரிக்கிறார். அது மொத்த இஸ்ரவேல் ஜனத்தின் வெற்றியாய், ஜெயமாய் மாறுகிறது. தலையாட்டி கேட்டவற்றை செயல்படுத்த வேண்டிய நேரத்தில் செயல்படுத்தாவிட்டால் நாம் பொம்மையாகி விடுகிறோம், கேட்டதும் பிரயோஜனமில்லாமல் போய் விடுகிறது.
அன்பானவர்களே, இஸ்ரவேலரின் இராணுவத்தைப் போல் தான் இன்றைய கிறிஸ்தவர்கள் பலரும் இருக்கின்றனர். ஆலயத்தில், சமூக வலைதளங்களிலும் தேவ வார்த்தையை மிகவும் விரும்பி தலையசைத்துக் கேட்கின்றனர். ஆனால் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துவதில்லை. சத்துருவை வீழ்த்த தேவன் கொடுக்கின்ற ஆலோசனையெல்லாம் கேட்டும், அமைதியாக செயல்படாமல் இருந்து விடுகின்றனர். மூன்றரை வருடம் இயேசுவோடு பயணித்த சீஷர்கள் பயந்து பின் வாங்கி செல்கின்றனர். அவர்களைக் கொண்டு தேவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள் என துணிந்து நின்றவர்களைக் கொண்டு தேவன் அரிய பெரிய காரியங்களை செய்தார். நாமும் தலையாட்டி பொம்மை போல் இராமல், செயல்படும் ஆயுதங்களாக மாறுவோம். தேவனின் ராஜ்யம் கட்டப்படும்.
- Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
8000 கிராமங்களில் VBS ஊழியங்கள் செய்ய ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864