By Village Missionary Movement
Monday, 21-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 21-06-2021
“சுவிசேஷத்தை நான் பிரசங்கி(ப்பது)... என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.” – 1கொரிந்தியர் 9:16
கிறிஸ்தவ உலகில் பரிசுத்த வேதாகமத்தை அடுத்து அதிகம் மதிக்கப்படுகிறதும், விற்கப்படுகிறதுமான புத்தகம் ஜான் பனியன் எழுதிய “மோட்ச பிரயாணம்”. இவர் இதை 1675ம் ஆண்டு சிறையிலிருந்தபோது எழுதினார். அவர் வாழ்ந்த நாட்களில் இயேசுகிறிஸ்துவைக்குறித்து பிரசங்கம் செய்ய வேண்டுமானால் அரசிடம் உரிமம் பெற வேண்டுமென்பது சட்டம். ஆனால் ஜான் பனியன் சட்டத்தைக் குறித்து கவலைப்படாமல் எங்கும் சுற்றித் திரிந்து இரட்சிப்பைக் குறித்துப் பிரசங்கித்தார். ஆகவே அவர் சிறையிலடைக்கப்பட்டார். இனிமேல் பிரசங்கிக்கமாட்டேன் என்று சொன்னால் விடுதலை பெறலாம் என்று வாய்ப்பு இருந்தும் அதைப் பற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
ஒருநாள் சிறைச்சாலைக்கு அவரது மகள் அவரைப் பார்க்க வந்தாள். கந்தலாடை அணிந்த மெலிந்த அவளுடைய தோற்றத்தைப் பார்த்தவுடன் அவரது கண்கள் கலங்கின. மகள் பரிதாபத்தோடு அவரது முகத்தைப் பார்த்து “அப்பா, வீட்டில் எல்லோரும் கொடிய வறுமையில் வாடுகிறோம். அம்மா என்னை உங்களிடம் அனுப்பினார்கள். இனி பிரசங்கிக்கவேண்டாம் அப்பா. வீட்டிற்கு வாருங்கள்” என்று கண்ணீரோடு சொன்னாள். ஜான் பனியனின் உள்ளம் உடைந்தது. தன் மகளை மார்போடு அணைத்துக்கொண்டு அவளது மெலிந்த முகத்தில் முத்தமிட்டார். “அன்பு மகளே ஆண்டவரின் அன்பை அழிந்து போகும் மனுக்குலத்திற்கு நான் எப்படி கூறாமல் இருப்பேன். நீ போய் வா. கர்த்தர் உங்களை பாதுகாப்பார்” என்று கூறி அனுப்பிவிட்டார்.
ஆம், அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, ஜான் பனியனைப் போல சுவிசேஷத்தை அறிவிப்பது என் மேல் விழுந்த கடமை. அறிவிக்காதிருந்தால் எனக்கு ஐயோ! என்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஊழியர்கள் மட்டும்தான் இதை செய்ய வேண்டுமென்பதல்ல. கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் பிறருக்கு ஆண்டவரை அறிவித்தே ஆக வேண்டும். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும், சூழ்நிலைகள் சாதகமாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவிக்க வேண்டியது நம் மேல் விழுந்த கடமையாகும்.
அன்பானவர்களே! இயேசுகிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள் நிறைவேறி வருகிறதை கண்கூடாக பார்க்கிறோம். முடிவு சமீபமாயிற்று, மனுஷகுமாரன் வரும் கடைசி நொடிப்பொழுதில் நாம் இருக்கிறோம். ஆனால் இன்னும் ஆண்டவரை அறியாத மக்கள் நம்மைச் சுற்றிலும் உண்டே! அவர்களுக்கு நியாயத்தீர்ப்பைக் குறித்தும், பரலோகம், நரகத்தைக் குறித்தும் அறிவிக்க வேண்டிய கடமை நம்முடையதல்லவா? இதை உணர்ந்தவர்களாய் தேவ ராஜ்யத்திற்காக பிரயாசப்படுவோம். இறுதி மூச்சு வரை சுவிசேஷம் அறிவிக்கும் சிந்தையோடு வாழ்வோம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கட்டிடப் பணிகளுக்கான தேவைகள் சந்திக்கப்பட்டு, விரைவில் கட்டி முடிக்கப்பட, தேவ ஞானத்தோடு கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250