By Village Missionary Movement
Monday, 27-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 27.04.2026
கிரியைக்கேற்ற பலன்
"...மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;…” - மத்தேயு 7:12
கட்டிடங்களை கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒரு இன்ஜினியரிடம் வேலை செய்த ஒரு மேஸ்திரி அவரிடம் வந்து ஐயா, நான் பல ஆண்டுகள் தங்களிடம் பணி செய்து விட்டேன். இனி வயது முதிர்வு காரணமாக ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே எனது பணியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டுகிறேன் என்று கூறினார். உடனே அந்த இன்ஜினியர் அவரைப் பார்த்து ஐயா, இன்னும் ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிவிட்டு நீங்கள் அதன் பின் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். அந்த மேஸ்திரியும் சரி என்று ஒப்புக்கொண்டு அந்த வீட்டை மேற்பார்வை செய்து கட்டி முடித்தார். அப்போது அவரது இன்ஜினியர், “ஐயா, பல ஆண்டுகளாக என்னிடம் நீங்கள் உண்மையாக வேலை செய்துள்ளீர்கள். அதனால் இந்த வீட்டை உங்களுக்கே பரிசாக அளிக்கிறேன்” என்றார். அப்போது அந்த மேஸ்திரி ஷாக் ஆகி விட்டார். ஐயோ எனக்கு என்று முன்னமே தெரிந்திருந்தால் நான் இந்த வீட்டை இன்னும் சிறப்பாக, தரமான பொருளைக் கொண்டு அழகாக கட்டியிருக்கலாமே என்று தன் மனதிற்குள் நினைத்து வருந்தினார்.
நாம் செய்யும் எந்த செயலுக்கும் கர்த்தரிடத்திலிருந்து பலன் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சிறப்பாய் செய்ய வேண்டும். நம் கிரியைக்கேற்ற பலன் கர்த்தரிடத்திலிருந்து வரும். அது எத்தனை பெரிய ஆசீர்வாதம்! வேதத்திலும் கூட யோப்பா பட்டணத்தில் தொற்காள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தார்கள். அவர்கள் விதவைகளுக்கு, தேவையிலுள்ளவர்களுக்கு அங்கிகளையும் வஸ்திரங்களையும் தைத்துக் கொடுத்தார்கள். பல நற்கிரியைகளையும் செய்து வந்தார்கள். அதனால் அவர்களைப் பற்றி வேதத்தில் எழுதும் போது பரிசுத்த ஆவியானவர், அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்து கொண்டு வந்தாள் என கூறுகிறார். மிகுதியாய் என அடைமொழியோடு கூறுகிறார். தொற்காள் வியாதிப்பட்டு மரித்த போது, அவர்கள் தொற்காளை குளிப்பாட்டி, மேல் வீட்டிலே கிடத்தி வைத்ததோடு, பேதுருவை தாமதமில்லாமல் அழைத்து வர ஆள் அனுப்பினர். பேதுரு வந்து ஜெபித்தால் தொற்காள் உயிருடன் வரலாம் என எண்ணினர். அதே போல் பேதுரு வந்து முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, 'தபீத்தாளே, எழுந்திரு' என்றார். தொற்காள் உயிருடன் எழும்பினார்கள். கிரியைக்கேற்ற பலன் கிடைத்தது.
நாமும் கூட தொற்காளைப் போல நம்மால் இயன்ற நற்கிரியைகளை பிறருக்குச் செய்வோம். ஏனெனில் தேவன் அவனவனுடைய கிரியைக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். ஆம், நமக்குக் கொடுக்கப்பட்டவைகளில் உண்மையாயிருப்போம். சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்து கர்த்தரிடத்தில் ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. ஈடித் கிறிஸ்டோபர்
ஜெபக்குறிப்பு:-
பைபிள் அம்மாக்கள் சந்திக்கும் பெண்கள் கர்த்தரை அறிய ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864