By Village Missionary Movement
Tuesday, 21-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 21.04.2026
மனரம்மியம்
“…நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” - பிலிப்பியர் 4:11
குளத்திலே வாழ்ந்து வந்த மீன் ஒன்று தினமும் காலையில் வானத்தை அண்ணாந்து பார்க்கும். அந்த குளத்தின் மேலே பறக்கும் பறவைகளைக் கண்டு, இவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். உலகம் முழுவதும் பறந்து சென்று, உலகத்தின் அழகைக் கண்டு மகிழ்ந்து இன்புறுகிறார்கள். நானோ இந்தத் தண்ணீரிலேயே என் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி மிகுந்த அதிருப்தியுடன் வாழ்ந்து வந்தது.
ஒருநாள் கொக்கு ஒன்று அந்தப் பக்கமாக மேலே பறந்து சென்றது. உடனடியாக இந்த மீன் நானும் அந்த கொக்கைப் போல உலக அழகைக் கண்டு மகிழப்போகிறேன் என்று கூறி, தண்ணீரிலிருந்து துள்ளி வெளியே குதித்தது. இந்த அழகான பூமியை கண்டு மகிழ்ந்து இன்புற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஒரு சில நிமிடத்தில் அந்த மீன் மாண்டு போனது. இது ஒரு கற்பனைக்கதையாக இருந்த போதிலும், இது நமக்குப் புகட்டும் பாடம் வலிமையானது.
இன்றைக்குப் பெரும்பாலான மனிதர்கள் அதிருப்தியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறரிடம் உள்ள செல்வம் நம்மிடம் இல்லையே என்பதினால் பொறாமைப்படுவதும், அதிருப்தி அடைவதும், மனச்சோர்வு அடைவதுமாகக் காலம் முழுவதும் தாழ்வு மனப்பான்மை உடையவராகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகாது. “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலணுண்டு” (பிலிப்பியர் 4:13) என்கிற பவுலைப் போல நாமும் வாழ்வோம்.
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” (1 தீமோ. 6:6) என்ற வசனத்தின் படி, நமக்கு தேவனால் அருளப்பட்டது எதுவோ, அதை வைத்துக்கொண்டு மனரம்மியமாய் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நம்மிடம் இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது, ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் கொடுக்கும். நம்மிடம் இருப்பது போதும் என்று இருந்தாலே அமைதி நம்மைத் தேடி வரும். அடிப்படை வசதி கூட இல்லாமல் கோடான கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். ஆனால் நமக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் என நல்லதொரு வாழ்வை தேவன் கொடுத்திருக்கிறார். எனவே நம்மிடம் இருப்பதை வைத்துக் கொண்டு மன நிறைவாய் வாழக் கற்றுக் கொள்வோம்.
- Mrs. கலைச்செல்வி பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
எழுப்புதல் விரும்பும் பங்காளராக இணைந்துள்ளவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864