By Village Missionary Movement
Monday, 20-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 20.04.2026
வாழ்க்கையில் சாட்சி
“…சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;” - எபேசியர் 4:26
கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழும் விசுவாச குடும்பங்கள் அன்பும், பொறுமையும், தெய்வீக சமாதானமும் நிறைந்த ஒரு சாட்சியுள்ள குடும்பங்களாய் வாழ வேண்டும். ஒரு வேளை சிறிய பிரச்சனை ஏற்பட்டு கசப்பு ஏற்பட்டாலும் அன்று இரவு நித்திரைக்குச் செல்லும் முன்பதாக அது சரி செய்யப்பட்டு, குறிப்பாக கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மன்னித்து, சமாதானமாய் நித்திரைக்குச் செல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான, குணமுள்ள குழந்தைகள் குடும்பத்தில் உருவாவதற்குரிய ஏதுவாயிருக்கும்.
கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஆலன் ரெட்பாத் என்கிற வாலிபன், தேவனை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தான். ஒரு முறை அவனது அப்பா, அம்மாவை மிகவும் கோபத்துடன் கடிந்து கொண்டார். அம்மா பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். அன்று இரவு அவர்கள் மூவரும் உணவருந்த உட்கார்ந்தனர். அப்பொழுது அப்பா, அம்மாவின் கையை பற்றிக் கொண்டு, நான் ஏன் இன்று உன்னிடத்தில் மிகவும் கடினமாக நடந்து கொண்டேன் என்றே எனக்குத் தெரியவில்லை. மிருகத்தனமாக நடந்து கொண்டதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடு என்றார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஆலன், தன் அறையினுள் சென்று முழங்கால் படியிட்டு, "தேவனே, இப்படி ஒரு தகப்பனாரை எனக்கு தந்ததற்காக உமக்கு நன்றி. என்னையும் உம்மைப் போலாக்கும்" என்று ஜெபித்தான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை மாறிற்று. தேவனுக்கு ஊழியம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தான். அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற மூடி நினைவு திருச்சபையின் நீண்ட நாள் போதகராக அவர் பணியாற்றினார்.
தேவனை நேசிக்கிறவர்களாக குழந்தைகள் வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா? பெற்றோர் தங்கள் வாழ்வில் தெய்வீக அன்பை காண்பிப்பவர்களாக மாற வேண்டும். தாழ்மை, பொறுமை, பிறரை மன்னித்தல் ஆகிய நற்குணங்களை உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்ற வசனத்தின் படி, நமக்கு தீங்கு இழைத்தவர்களைப் பழிவாங்காமல், அவர்களை மன்னித்து தேவனுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும். "என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" (1 யோவான் 3:18). பெற்றோராகிய உங்களது வாழ்வு தேவனுக்கு பிரியமானதாக இருக்கட்டும்.
- T. பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
நம் வாலிபர் முகாமில் ஊழியத்திற்கென்று அர்ப்பணித்தவர்கள் நம் ஊழியத்தோடு இணைய ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864