By Village Missionary Movement
Tuesday, 14-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 14.04.2026
ஏற்ற சமயம்
“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” - நீதி. 25:11
வியாபாரி ஒருவர் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினிமித்தம் தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவர் மன மடிவாய், சோகமாய் இருப்பதைக் கண்ட அவரது நண்பர், அருகிலுள்ள தேவாலயத்துக்கு வா என அவரை அழைத்துச் சென்றார். அச்சபை போதகர் அவருக்கு சுவிசேஷத்தை எடுத்துக் கூறி ஜெபித்து அனுப்பினார். அந்த வியாபாரியின் உள்ளத்தில் சமாதானம் பிறந்தது, தற்கொலை எண்ணமும் மாறியது.
1 சாமுவேல் 20 ம் அதிகாரத்திலே யோவாப் ,சேபாவைப் பின்பற்றி போகையில் ஆபேல் என்ற பட்டணத்தை முற்றிகை போட்டு அதன் அலங்கத்தை விழப்பண்ண வகை தேடினர். அப்பொழுது ஒரு புத்தியுள்ள ஸ்திரீ, ஒரு மனிதனுக்காக பட்டணம் முழுவதும் அழிவதை விரும்பாமல் யோவாபோடே பேசினாள், பட்டணம் காக்கப்பட்டது. இதேப் போல் பாவ பிடியில், பிசாசின் பிடியில், சாபக் கட்டில் அழிந்து கொண்டிருக்கிற அநேகர் நம்மை சுற்றி உண்டு. அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றக் கூடிய ஜீவனுள்ள வார்த்தை உங்களிடமும், என்னிடமும் உண்டு. அதை ஏற்ற சமயத்தில் சொல்லி, மக்களை அழிவிலிருந்து காக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. ‘தேவாலயத்துக்கு வா’ என சொன்ன ஒரு வார்த்தையின் மூலம், ஒரு ஆத்துமா தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட்டு நரக ஆக்கினையிலிருந்து காக்கப்பட்டது. அதே போல ஒரு புத்தியுள்ள ஸ்திரீயின் வார்த்தையினிமித்தம் பட்டணம் முழுவதும் காக்கப்பட்டது.
நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டது போல, நம்மை சுற்றியுள்ளவர்களும் நித்திய ஜீவனைப் பெற வாஞ்சிக்க வேண்டும். வாஞ்சிப்பதோடு நின்று விடாமல் முயற்சிக்க வேண்டும். நம்மை உயிர்ப்பித்த தேவன் அவர்களையும் உயிர்ப்பிக்க வல்லவர். அதனால் உயிர்ப்பிக்க வல்ல தேவனை, தேவனின் வார்த்தையை நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு சொல்லுவோம்.
ஏற்ற சமயத்தில் சுவிசேஷம் சொல்லப்படாவிட்டால் அநேகரை ஆத்தும மரணமடையச் செய்து நித்திய நரகத்திற்குள் தள்ளிவிடும். ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் வார்த்தையை நாம் அறிந்திருப்பது திருப்தியடைந்து கொள்வதற்காக அல்ல. அதை பிறருக்கும் அறிவித்து, அவர்களும் நித்திய ஜீவனைப் பெற பிரயாசப்படுவோம். இந்த முழு உலகத்தின் விலையைக் காட்டிலும் ஒரு ஆத்துமா விலையேறப்பெற்றது, அந்த ஒரு ஆத்துமா காக்கப்பட்டால் பரலோகம் மகிழும். எனவே இன்றே ஒரு தீர்க்கமான முடிவு எடுப்போம். நாம் சந்திக்கிற நபர்களுக்கு இயேசுவை காண்பிப்போம். நம் நிமித்தம் பரலோகம் மகிழட்டும். பரலோகம் மகிழ்ந்தால் பரலோக ஆசீர்வாதங்கள் நம்மை வந்தடையும்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு ஒத்த தரிசனமுள்ள சுவிசேஷகர்கள் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864