By Village Missionary Movement
Monday, 13-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 13.04.2026
யாவையும் செய்வார்
“கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;…” - சங்கீதம் 138:8
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்த விஞ்ஞானி ஒரு முறை அவரிடம் அன்று மாலை 5.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து செல்ல அனுமதி கேட்டார். அப்துல் கலாம் அவரிடம் செல்லும் காரணத்தைக் கேட்டார். உடனே அந்த விஞ்ஞானி என் பிள்ளைகளிடம் இன்று அவர்களை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளேன் என்றார். கலாமும் அனுமதித்தார். அந்த விஞ்ஞானியும் தன் பணியைச் செய்ய ஆரம்பித்தார். வேலை மும்முரத்தில் 5.30 மணி, பிள்ளைகளுக்குக் கொடுத்த வாக்கு இவற்றையெல்லாம் மறந்து விட்டார். அவர் வேலையை முடித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்த போது இரவு 8.30 மணி ஆயிற்று. தன் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்துக்கொண்டே வீட்டிற்குச் சென்றார். வீட்டில் பிள்ளைகள் இல்லை. மனைவியிடம் விசாரித்த போது, அப்துல் கலாம் அவர்கள் வந்து பிள்ளைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறினார்கள். விஞ்ஞானி வேலையில் மும்முரமாக இருந்ததால், அவர் செய்ய வேண்டிய காரியத்தை அவர் மேலதிகாரியான அப்துல் கலாம் அவர்களே செய்தார்கள்.
அதே போல் வேதத்திலும் கூட, தானியேல் மற்றும் அவருடைய நண்பர்கள் கர்த்தருக்காக வைராக்கியமாக ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்ச ரசத்தினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று தீர்மானம் எடுக்கின்றனர். அதற்காக பிரதானிகளின் தலைவரிடத்தில் பேசும் போது, அதற்கான அனுமதி கிடைக்க தேவனே கிருபை செய்கிறார். பத்து நாள் சென்ற பின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட தேவன் கிருபை செய்கிறார். அவர்களுக்கான ஞானத்தை, திறமையை பெருகச் செய்கிறார். ஏனெனில் அந்த இடத்தில், அந்த நேரத்தில், அவர்களுக்கு அது தான் தேவையாயிருந்தது. அதை தேவன் செய்கிறார். தானியேல் மற்றும் அவரது நண்பர்கள் இதற்காக ஜெபிக்கவில்லை. ஆனாலும் தேவன் 10 மடங்காய் பெருக்கி கொடுக்கிறார். நம் தேவன் தமது வல்லமையின்படி, பராக்கிரமத்தின்படி கொடுப்பார். மனுஷர் அளக்கின்ற அளவின் படி கொடுக்க மாட்டார்.
பிரியமானவர்களே, நாம் தேவனுடைய வல்லமையின்படி, பராக்கிரமத்தின்படி பெற்றுக்கொள்ள, நம்மால் இயன்ற அளவு கர்த்தருக்கு பிரியமான காரியத்தை செய்ய பிரயாசப்படுவோம். தேவனுக்காக நாம் செயல்படும்போது, கொடுக்கும் போது, நமக்கான காரியங்களை பார்த்துக்கொள்ள அவர் வல்லவராயிருக்கிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத். 6:33).
- Bro. ஸ்டாலின் ராஜா
ஜெபக்குறிப்பு:-
எல்லா தாலுகாவிலும் வீட்டு ஜெப குழுக்களை நடத்தும் ஆக்கில்லா பிரிஸ்கில்லாக்கள் எழும்ப ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864