By Village Missionary Movement
Wednesday, 08-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 08.04.2026
வேதம்
“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;…” - சங்கீதம் 19:7
ராஜன், குமார் இருவரும் நல்ல நண்பர்கள். தினமும் விறகு வெட்டி அதை விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். ஒரு நாள் இருவரும் விறகு வெட்டும்படி காட்டிற்குள் சென்றனர். சாயங்காலமான போது ராஜன் அதிகமான விறகுகளை வெட்டி கொண்டு வந்ததை கவனித்த குமார், உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு விறகுகளை வெட்ட முடிந்தது? என்று கேட்டார். அதற்கு ராஜன் நான் கொஞ்சம் நேரம் விறகு வெட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுப்பேன். பிறகு மீண்டும் விறகு வெட்டுவேன் என்று சொன்னார். மறுநாள் குமாரும், ராஜன் சொன்னது போலவே இடையிடையே ஓய்வெடுத்து பிறகு விறகு வெட்டினார். ஆனாலும் அன்றும் அவரால் குறைவான விறகுகளையே வெட்ட முடிந்தது. மறுநாள் ராஜன் என்ன தான் செய்கிறார் பார்க்கலாம் என்று மறைந்திருந்து கவனித்தார் குமார். ராஜன் தான் ஓய்வெடுக்கும் நேரத்தில், விறகு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை நன்றாக தீட்டி, அதை கூர்மைப்படுத்தியதை பார்த்தார் குமார். ராஜனால் எப்படி இவ்வளவு விறகுகளை வெட்ட முடிந்தது என்று அப்பொழுது தான் அவருக்குப் புரிந்தது.
இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் கூர்மைப்படுத்தப்படாமல் மழுங்கி காணப்படுகிறதா? நம்மை கூர்மைப்படுத்தி சரி செய்கிற நல்ல ஆயுதம் வேதவாசிப்பும், ஜெபமும் தான். சங்கீதம் 19:7,8 ல் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, பேதையை ஞானியாக்குகிறது, இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது, கண்களைத் தெளிவிக்கிறது என்று வேதத்தின் மகத்துவங்களை, சங்கீதக்காரன் தாவீது எழுதி வைத்திருக்கிறாரே. வேதத்தை முறையாக வாசிக்க, அனுதினமும் ஜெபிக்க, ஆயத்தமாவோம். மிஷனெரி C..T ஸ்டட் அவர்கள் ஆப்பிரிக்க காடுகளில் ஊழியம் செய்த போது அவருக்கு 82 வயது. மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் வேதத்தை வாசிப்பாராம். அப்படியென்றால் இன்று மின்சாரம், பல விதமான வேதாகமங்கள் அதாவது சிறுவர் வேதாகமம், ஒத்த வாக்கிய வேதாகமம் என பல்வேறு வேத புத்தகம் நமக்கு இருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் Mobile Phone ல் வேதாகமத்தை எளிதாக வாசிக்கலாமே! இப்படிப்பட்ட வேதத்தை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் பெரோயா பட்டணத்தார் நற்குணசாலிகளாயிருந்தார்கள் என்று அப். 17:11 ல் வாசிக்கிறோம்.
இதை வாசிக்கிற அன்பு நண்பர்களே, இந்த ஆண்டின் துவக்கத்தில் நீங்கள் அநேகத் தீர்மானங்களை எடுத்திருக்கலாம். அதில் எவற்றையெல்லாம் follow பண்ணுகிறோமோ தெரியவில்லை. ஆனால் வேதத்தை திட்டமிட்டு வாசித்து ஜெபிப்போம் என்ற தீர்மானம் நமது பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். வேதம் நம் வீட்டு அலமாரியில் அலங்கார பொருளாய் மட்டும் இராமல், நமது இருதயத்தை, ஆத்துமாவை, மணம் வீசச் செய்யும் பரிமள தைலமாய் மாறட்டும். ஆமென்.
- Mrs. புஷ்பா சைமன்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு தாலுகாவிலும் Mission Action Centre கான இடங்கள் கிடைக்க ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864