By Village Missionary Movement
Tuesday, 24-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 24.03.2026
மாதிரியான வாழ்வு
"...இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக" - சங்கீதம் 69:6
நிர்மலா ஒரு கம்பெனியில் பணி செய்து வந்தாள். பதவி உயர்விற்கான எல்லாத் தகுதி இருந்தும், சரியான நேரத்திற்காகக் காத்திருந்தாள். ஏனெனில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் Placement போடுவார்கள். அதற்கான தருணமும் வந்தது. பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர், பலர் பதவி உயர்வு பெற்றனர். ஆனால் நிர்மலாவிற்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. அந்த இடத்தில் மேரி அமர்த்தப்பட்டாள். ஆனால் அந்த பதவிக்கான அனுபவம் இல்லாமலேயே எப்படி அமர்த்தப்பட்டாள் என நிர்மலா விசாரித்த போது தான் தெரிந்தது, அதிக பணம் கொடுத்து அந்தப் பதவி வாங்கப்பட்டது என்று. அப்போது நிர்மலா தன் வீட்டிற்கு வந்து கிறிஸ்தவர்களே இப்படித்தான். சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் என புலம்பி அழுதாள். அதோடு கிறிஸ்தவர்கள் மீதே அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. உலகம் கிறிஸ்தவர்களிடம் உண்மையை, சாட்சியான வாழ்வை எதிர்பார்க்கிறது. நாம் சாட்சியாக வாழ்வதும், தேவராஜ்யம் கட்டப்பட நமது பங்களிப்புதான் என்பதை மறந்து விடுகிறோம்.
தான் உயிர்த்தெழுந்தவுடன் சீஷர்களை காத்திருக்கச் சொல்லி, பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும் போது, நீங்கள் பெலனடைந்து எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அதே போல் சீஷர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று சாட்சிகளாய் வாழ்ந்த போது தான் கிறிஸ்தவர்கள் என பெயர் பெற்றனர். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் என்பதை போர்வையாய் போர்த்துக் கொள்கிறோம். தேவையில்லாத போது ஒதுக்கி வைத்து உலகத்தார் போல் வாழ்வு வாழ்கிறோம்.
பலர் வேதத்தை வாசித்தாலும், இயேசுவை நேசித்தாலும், கிறிஸ்தவர்களாக வாழாமல் இருக்கின்றனர். சீஷர்கள் சாட்சி வாழ்வு வாழ்ந்ததால் தான் எழுப்புதல் உண்டானது. இன்று எழுப்புதல் வராததற்குக் காரணம் சாட்சி வாழ்வு இல்லாதது தான். பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்லும் போது வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு என்கிறார். அதுவும் எதற்காக எனில் ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு என்கிறார்.
இதை வாசிக்கிற அன்பரே, நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நம் வாழ்வு யாரும் இடருகிறதற்கு ஏதுவாயில்லாதபடி பார்த்துக் கொள்வோம். பவுல் சொன்னது போல் வார்த்தை, நடக்கை எல்லாவற்றிலும் தேவனை காண்பிக்கிறவர்களாய் வாழ்வோம். அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு வருகிறது என சொல்லி, பலனோடு காத்திருக்கும் நம் தேவனுக்கு பங்களிப்பாய், நம் வாழ்வில் அவரை பிறருக்கு காட்டுவோம். நாம் பேசுகின்ற வார்த்தையை விட நம் வாழ்வு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கட்டும். அவரது பிரதிநிதியாய் வாழ்வோம், ஆசீர்வாதம் பெறுவோம்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:-
கிராமங்களை தத்தெடுக்கும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864