By Village Missionary Movement
Friday, 18-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 18-06-2021
தண்ணீரை கடந்து வந்தோம்
“சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்.” – சங்கீதம் 91:13
நாம் நிற்பதும் நிர்மூலமாகாததும் கர்த்தருடைய கிருபையே! இன்று உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. அநேகர் அந்நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். நம் சரீரத்துக்கு தேவையான ஆக்சிஜன் அளவைக் குறைத்துப் போராடவைக்கிறது இந்த நோய். நமக்கும் வந்துவிடுமோ என்ற பயத்தில் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரண்டாவது அலையில் சிக்கியவர்கள் அநேகர். சிக்கி விடக்கூடாது என்ற பயத்திலும், கவலையிலும் வாழ்பவர்கள் மீதிப்பேர். இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான முன் அடையாளமாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது, “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்;…” என்று லூக்கா 21:11ல் எழுதப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நானும், என் தாயாரும் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோம். சரீரம் மிகவும் பலவீனமடைந்து எங்கோ ஆழத்தில் செல்வது போல் தோன்றியது. “ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர். என் கரத்தைப் பிடித்துக்கொள்ளும். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜீவாலை உன்பேரில் பற்றாது என்று சொன்னீரே என்று ஜெபித்தேன். தண்ணீரையும் தீயையும் கடந்து வருவது போல் நாங்கள் கொரோனா நோயைக் கடந்து வந்தோம். ஆண்டவரே! நான் இன்னும் உமக்காக ஊழியம் செய்ய விரும்புகிறேன். என்னை பயன்படுத்தும் என்று இரவும் பகலும் கதறினேன். ஆண்டவர், “இதோ நான் உன்னுடனே கூட இருக்கிறேன். நீ பயப்படாதே” என்ற அவருடைய வார்த்தைகள் மூலம் எங்களை தேற்றினார். என்னையும், 93 வயதுள்ள என் தாயாரையும் கொரோனா நோயின் பிடியிலிருந்து விடுவித்து வீட்டிற்கு வர கிருபை செய்தார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆம், கொரோனாவாகிய சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து செல்ல தேவன் உதவி செய்வார். இந்நோய் தாக்காமல் இருந்தால் அதற்காக கோடி நன்றி கூறுங்கள். அதையும் மீறி இந்த உபத்திரவத்தின் பாதையில் நடக்க நேர்ந்தாலும், ஆண்டவரை மட்டுமே பிடித்துக் கொள்ளுங்கள். யோபுவைப் போல், “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்று தைரியமாய் ஆண்டவரை பற்றிக் கொள்ளுங்கள். பயந்து விடாதீர்கள். சாத்தான் பயத்தைக் கொண்டு வருவான். ஆனாலும் திடன் கொள்ளுங்கள். ஆண்டவரின் கரம் கொரோனாவை விட வல்லமையுள்ளது. தீயையும் தண்ணீரையும் கடக்க ஆண்டவர் தாமே பெலன் தந்து நம்மை விடுவிப்பார். ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தை ரூ. 2000/- கொடுத்து தத்து எடுக்கும் 1 இலட்சம் குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250