By Village Missionary Movement
Friday, 20-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 20.03.2026
என் தாலந்து இயேசுவுக்கே
"நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" - நீதி.3:27
அப்போஸ்தலர் மூலம் தேவன் உயிரோடு எழுப்பின முதல் பெண்மணி தொற்காள். இந்த பெயரின் அர்த்தம் பெண் மான். அதிகமாய் பேசப்படாத, புதிய ஏற்பாட்டிலே சீஷி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற பெண்மணி. அதிகமாய் தான தர்மங்களை செய்து, நற்கிரியைகளுக்கு சொந்தக்காரி என்று சொல்லும் அளவிற்கு பலருக்கும் நன்மைகள் செய்த அந்த பெண்ணின் இன்னொரு பெயர் தபீத்தாள். வேதாகமத்தில் இவர் பெரிய ஊழியக்காரியாக அறியப்படவில்லை. பிரசங்கம் பண்ண தெரிந்தவர்களும் அல்ல. பெரிய அந்தஸ்து, அதிக படிப்பு, செல்வம் நிறைந்தவர்களும் அல்ல. ஆனால், தன் வாழ்க்கையின் மூலம் இயேசுவை வெளிப்படுத்தினார். புதிய ஏற்பாட்டில் இந்த பெண் மட்டும் தான் சீஷி என்று அழைக்கப்படுவது மிகவும் பெருமைக்குரிய காரியம். இவர் தன் வாழ்நாள் முழுவதும் தேவன் தனக்கு கொடுத்த தாலந்தாகிய தையல் தைக்கும் திறமையைப் பயன்படுத்தி, யோப்பா பட்டணத்தில் வாழ்கிற ஏழைகளுக்கும், விதவைகளுக்கும், வஸ்திரங்களையும், அங்கிகளையும் தைத்துக் கொடுத்தாள். இவரின் கைத்திறமையாகிய தையல் தொழிலை வைத்து, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து, தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தினார். இவர் வியாதிப்பட்டு மரித்த பிறகு இவரின் நற்கிரியைகளையும், குணத்தையும் குறித்து மக்கள் பேசினார்கள்.
இதை வாசிக்கிற நாமும் கூட ஆண்டவருக்கு சீஷியாகவும், நற்கிரியைகளையும், தான தர்மங்களையும் செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையின் மூலம் ஆண்டவர் எப்படிப்பட்டவரென்று நாமும் வெளிப்படுத்த வேண்டும். வேதாகமத்தில் பிலிப்பியர் 2:4 வசனத்தின் படி, "அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக." தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தை நாம் நம் கிரியை மூலம் வெளிப்படுத்த வேண்டும். நாம் செய்த கிரியை நம்முடைய மரணத்தில் தான் வெளிப்படும். நமது வாயின் வார்த்தைகளால் பேசப்படுவதை விட, நாம் வாழும் வாழ்க்கையின் மூலம் அதிகமாய் பேசப்பட வேண்டும்.
ஆம், தொற்காள் தன் கையிலுள்ள ஊசியை வைத்து தேவ நாம மகிமைக்காக வாழ்ந்து, தன் பங்களிப்பைக் கொடுத்துச் சென்றார். இன்று உங்களுடைய கையிலிருப்பது என்ன? பேனாவா? தட்டச்சுக் கருவியா? computer ஆ? உங்கள் கையில் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு உங்கள் பங்கை ஆண்டவரின் ராஜ்யத்திற்காக கொடுத்துக்கொண்டே இருக்கலாம். வாய்ப்பையும் தருணத்தையும் தவறவிடாமல் தேவன் நமக்கு கொடுத்திருக்கும் தாலந்து, திறமையின்படி நம் கையிலுள்ள அற்ப பொருளைக் கொண்டு பிறருக்கு ஆசீர்வாதமாய் வாழ்வோம்.
- Mrs. ரூத் குணசீலன்
ஜெபக்குறிப்பு:-
தொற்காள் தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுப்பவர்களை கர்த்தர் உடனிருந்து ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864