By Village Missionary Movement
Monday, 16-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 16.03.2026
கனியுள்ள வாழ்க்கை
"அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" - 1 பேதுரு 4:10
கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்க்கை என்பது வார்த்தைகளால் அல்ல, அர்ப்பணிப்பால் வெளிப்படுகிறது. தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் மூன்று அரிய வரங்களை அளித்துள்ளார்: நேரம், திறமை, செல்வம். இம்மூன்றையும் தேவனுடைய மகிமைக்காக பயன்படுத்தும் போது, நமது வாழ்க்கை கனி நிறைந்ததாக மாறும்.
ஒரு விவேகமான விவசாயி நல்ல அறுவடையை பெற நேரம், கருவி, நீர் ஆகிய மூன்றையும் தவறவிட மாட்டான். அதுபோல, ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நேரம் என்பது விதை, திறமை என்பது கருவி, செல்வம் என்பது உயிரளிக்கும் நீர் போல செயல்படுகிறது. இம்மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தால் தான் ஆவிக்குரிய அறுவடை கிடைக்கிறது.
நேரம் என்பது திரும்பக் கிடைக்காத தேவனுடைய வரம். இந்த நேரம் ஜெபம், வேதாகம வாசிப்பு, சேவை ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட வேண்டும். நேரம் விதைக்கப்படும் விதை போன்றது (எபேசியர் 5:16). திறமை என்பது தேவன் கொடுத்த தாலந்து. பாடல், போதனை, எழுத்து, நிர்வாகம் என எந்த திறமையாயினும், அதை கிறிஸ்துவுக்காக பயன்படுத்தும் போது அது பலருக்கு ஆசீர்வாதமாகிறது. செல்வம் என்பது பணம் மட்டுமல்ல; தேவன் கொடுத்த அனைத்து வளங்களும்! அவற்றை தேவனுடைய ராஜ்யத்திற்காக பகிரும் போது, அது விதைக்கு நீர் பாய்ச்சுவது போல செயல்படுகிறது. (மத்தேயு 6:21).
இந்த மூன்றையும் சிறப்பாக பயன்படுத்திய வேதாகம மனிதர்கள் அப்போஸ்தலர் பவுலும், நெகேமியாவும்! பவுல் தன் நேரம், அறிவு, உழைப்பு அனைத்தையும் சுவிசேஷத்திற்காக அர்ப்பணித்து, "நல்ல போராட்டத்தைப் போராடினேன்,ஓட்டத்தை முடித்தேன்" என்ற சாட்சியை விட்டுச் சென்றார் (2 தீமோத். 4:7). நெகேமியா ஜெபத்தில் நேரம் செலவிட்டு, தலைமைத்துவத் திறமையால் பணியைச் செய்து, தன் வளங்களை மக்களுக்காகப் பகிர்ந்து, இடிந்த சுவரை குறுகிய காலத்தில் கட்டியெழுப்பினார் (நெகேமியா 6:15).
நேரம் விதைக்கப்பட்டால், திறமையாக உழைத்தால், செல்வத்தை பகிர்ந்தால் - ஒரு விசுவாசியின் வாழ்க்கை முழு அறுவடையாக மாறுகிறது. கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இம்மூன்று வரங்கள் பூமியில் கனியளித்து, நித்தியத்தில் பலனைச் சேர்க்கும். நேரத்தை விதைத்து, திறமையை செலுத்தி, செல்வத்தை பகிர்ந்தால், உங்கள் வாழ்க்கை கனியுள்ளதாய் மாறும்.
- Mrs. பெர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு:-
மருத்துவமனையிலிருப்போர் பரிகாரியாகிய கிறிஸ்துவை அறிய, நம் ஊழியர்களை தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864